புகழ்த்துணை நாயனார்


புகழ்த்துணை நாயனார்




செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். 

சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து  அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.

குருபூஜை


புகழ்த்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post