கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன?

கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?

SEX  என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.

இப்போது இருப்பது போல் இணையதள வசதிகள் இல்லாத காலத்தில் காமம் அசிங்கம் அல்ல வாழ்வின் ஒரு பகுதி என அடுத்ததலைமுறைக்கு அழகாக எடுத்து சொன்ன உன்னதமான கலாச்சாரம் பாரத கலாச்சாரம்.

பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் பரிகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிராகாரத்தோடு நின்று போகின்றன.

சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள்  மனம் அது பற்றிச் சிந்திக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.

இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.

அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.

உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

.
மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி… இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.

கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது.

எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.

அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post