ஸ்ரீ சக்ரம்

(சிவனுக்கு)பாண லிங்கம்,
(விஷ்ணுவுக்கு) ஸாளக்ராமம்

என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் 'ஸ்வர்ண ரேகா சிலா'என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள்.

ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட - தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட - அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.

ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை (வழிபாட்டு முறையை)எடுத்துக் கொண்டாலும் அதில் 'மந்த்ரம்', 'யந்த்ரம்'என்று இரண்டு இருக்கும்.

ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்,சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு. அபார சக்தியுண்டு.

ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு.

அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது.

அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட (அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி)ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம்.

இப்பொழுது ஒவ்வொரு ஆவரணத்தில் எந்த எந்த தேவதைகள் உள்ளார்கள் என்பதை பற்றி எனக்கு தெரிந்த அளவில் பதிவிடுகின்றேன். தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ள அம்பிகை அருள்புரியட்டும்.

முதல் ஆவரணம்: இது 'பூபுரம்' எனப்படுகிறது. மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம், நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும். இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர். இது'த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது.

இரண்டாம் ஆவரணம்: பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது. குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர். ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது.

மூன்றாவது ஆவரணம்: இதன் வடிவம் எட்டிதழ் கமலம். இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது. குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர்.

நான்காவது ஆவரணம்: இது 14 முக்கோணங்களை உடையது. இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது. இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவதுஆவரணம்: இது 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'. இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர்.

ஆறாவது ஆவரணம்: இதுவும் 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர். நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர்.

ஏழாவது ஆவரணம்: இது எட்டுக் கோணங்களை உடையது. இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது. ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர்.

எட்டாவது ஆவரணம்: இது முக்கோண வடிவானது. இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர். ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஒன்பதாவது ஆவரணம்: இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும். இது பிந்து வடிவானது. இதில் சிவனும் சக்தியும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும்

தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்பவை 'அர்த்த மேரு' எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் 'அர்த்த மேரு' உள்ளது.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post