குலதெய்வத்தை கண்டறியும் சூட்சமம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குலதெய்வத்தை கண்டறியும் சூட்சமம் பற்றிய பதிவுகள் :


நம்முடைய குலத்தை காக்கின்ற காவல் தெய்வமே குலதெய்வம். ஒரு குலம் என்பது 64 தலைமுறையினரை குறிக்கும். அந்த 64 தலைமுறையினரின் ஆன்மாவும் குடிகொண்டிருக்கும் இடம்தான் குலதெய்வ கோயில். இந்த குலதெய்வ கோயிலுக்கு சென்று நாம் வழிபடும் போது நமது குலதெய்வ அருளுடன் நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதனை தான் சூட்சம முறையில் "பிற ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை காட்டிலும் முதலில் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும்" என்கின்றனர்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் குலதெய்வ வழிபாட்டை சிலர் மறந்து விட்டனர். இன்னும் சிலர் குலதெய்வத்தையே மறந்துவிட்டனர். இதனாலேயே சிலர் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் சிலரது குடும்பம் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைகிறது.

சரியான முறையில் குலதெய்வத்தை போற்றி வழிபட்டாலே வாழ்வில் அனைத்து சுபீட்சமும் பெறலாம். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப பலனை பெறலாம்.

குலதெய்வத்தை கண்டறியும் முறை :

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக சிலரால் நமது குல தெய்வம் யார் என்பது தெரியாமல் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் நமது முன்னோர்களின் ஆசி இருந்தால் மட்டுமே நமது குலதெய்வத்தை கண்டறிய முடியும்.

குலதெய்வத்தை களிமண்ணால் உருவம் செய்து வழிபடுவதை காட்டிலும் ஜோதி வடிவில் தீபமாக வழிபடுவதே சிறந்தது. 

முதல்நாளாக செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை வீட்டில் துவங்குவது நல்லது. பூஜையறையில் விநாயகர் மற்றும் பிற தெய்வங்களுக்கு படையல் வைத்து பின் குலதெய்வத்திற்கு என்று தனியாக ஒரு இலையில் தீபமேற்றி படையல் வைத்து வழிபட வேண்டும். ( இதில் படையல் என்பது அவல், பொரி போன்ற பூஜை பொருட்களை குறிக்கும். )

இந்த பூஜையை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தொடர்ந்து 41 நாட்கள் செய்ய வேண்டும். அதாவது இரு வேளைகளிலும் பூஜை அறையில் குலதெய்வத்திற்கென தனி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவ உணவுகள் தவிர்க்க வேண்டும்.

இந்த 41 நாளும் காகத்திற்கு உணவு படைக்க வேண்டும். பின் அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தூப தீபம் காட்டி உணவு படையல் படைத்து வழிபட வேண்டும். அதன்பிறகு முன்னோர்களின் பெயரில் ஏழை மக்களுக்கு உணவு தானம் வழங்க வேண்டும்.

இவ்வாறு வழிபடுவதால் நம் முன்னோர்களின் ஆசியுடன் நமது குலதெய்வத்தை சூட்சம முறையில் கண்டறிய முடியும்.

குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் அடுத்த பதிப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.

நன்றி

ஓம் நமசிவாய
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post