கர்நாடகாவில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கர்நாடகாவில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் பற்றிய பதிவுகள் :

அரண்மனையும் அழகும் நிறைந்த கர்நாடகாவின் மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி கோவில். 

இந்த கோவிலில் இருக்கும் அம்பிகை துர்கையின் அம்சம். மிகவும் சக்திவாய்ந்த அம்பிகை சாமுண்டீஸ்வரி என அழைக்கப்படுகிறார். 

பல நூற்றாண்டுகளாக இந்த நகரத்தை ஆண்டு வந்த மைசூர் அரசர்களுக்கு முக்கிய தெய்வமாக இருந்த குறிப்புகள் வரலாற்றில் உண்டு.

இந்த கோவில் சக்தி வழிபாட்டில் இருப்பவர்களுக்கு அதி முக்கிய ஸ்தலமாக விளங்குகிறது. 18 மஹா சக்தி பீடங்களுள் ஒன்றாக இந்த ஸ்தலம் இருக்கின்றது. இந்த கோவிலை க்ரவுஞ்ச பீடம் என்றும் குறிக்கின்றனர். அதாவது புராண காலத்தில் இந்த பகுதி க்ரவுஞ்ச புரி என்ற பெயரில் அழைக்கப்பட்டதை இந்த பெயர்.
மேலும் சக்தியின் தலை முடி இந்த இடத்தில் விழுந்தது என புராணம் சொல்கிறது.

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் ஹொய்சாலா அரசர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் கோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்படிருக்கலாம். 1659 இல் 3000 அடி கொண்ட இந்த மலைக்கு ஆயிரம் படிகட்டுகள் வரை உருவாக்கப்பட்டன. இந்த கோவிலின் முக்கிய அடையாளமாக இருப்பது இந்த கோவிலுக்கு முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த மலையின் ஏற்றத்தின் போது 700 ஆவது படிகட்டில், சிறிய சிவன் கோவிலுடன் கூடிய பிரமான்ட நந்தி சிலை அமைந்துள்ளது. இந்த நந்தி 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தை சுற்றிய பெரிய மணிகளும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை என்பது இந்த கோவிலின் விஷேச நாளாகும். இங்கு நிகழும் நவராத்திரி தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வின் போது இந்த கோவிலிலும், நகரத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் குவிவது வழக்கம். 

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், இங்கு கொண்டாடப்படும் சாமுண்டி ஜெயந்தி விழா. நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமான ரூபங்களில் இங்கே அலங்கரிக்கப்படுவார். எழாம் நாளில் இங்கே கால ஆரத்தி நிகழும். அப்போது மைசூர் மஹாராஜாவல் கொடையளிக்கப்பட்ட நகைகள் மாவட்ட பொக்கிஷ கிடங்கிலிருந்து இந்த கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அலங்காரம் நிகழும்.

இந்த மலையின் அடிவாரத்தில் ஜுவாலமுகி திரிபுரசுந்தரி கோவில் உண்டு. இந்த அம்மன் சாமுண்டியின் சகோதரி என்றும், ரக்தபீஜ என்ற அரக்கனை வதம் செய்யும் போரில் சாமுண்டி தேவிக்கு துணை நின்றவர் ஆவார்.

Tag :

#Chamundeshwari Temple
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post