சூரிய பகவானை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூரிய பகவானை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் பற்றிய பதிவுகள் :

ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.

காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம்.
 
ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில், தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன. 

நவக்கிரகங்களில் ராஜ கிரகமாக விளங்கும் சூரியனுக்கு, சிம்மம் சொந்த வீடாகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
 
ஆவணி மாதத்தில் சூரிய பலம் அதிகமாக இருப்பதால், முப்பது நாட்களிலும் அதிகாலையில் கீழ்க்கண்ட சூரிய கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும். சோர்வில்லாத வாழ்வு அமையும். கண்நோய் நீங்கும், புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.

‘காசினி இருளை நீக்கிக் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்க
வாசி ஏழுடைய தேரின்மேல் மகா கிரிவலமாகி வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி! போற்றி!’
 
என்று சூரியனுக்குரிய பாடல் எடுத்துரைக்கின்றது. ‘காசினி’ என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகின் இருளைப் போக்கி ஒளியைப் பாய்ச்சும் ஒரே கிரகம் சூரியன் தான். எனவே இருள்மயமான வாழ்வு அமைந்தவர்களும், ஒளிமயமான வாழ்வு அமைய விரும்புபவர்களும் இந்த ஆவணி மாதம் முழுவதும் இல்லத்தில் சூரியனை வழிபடுவதோடு சூரியனுக்குரிய ஆலயமான சூரியனார் கோவில் சென்றும் வழிபட்டு வரலாம்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று சொல்லுவர். அதாவது கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால் காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும். 

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post