சோமவார பிரதோசம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோமவார பிரதோசம் பற்றிய பதிவுகள் :

இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வீட்டில் பூஜை அறையில் காப்பரிசி படையலிட்டு சிவனை வணங்கலாம்.

சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

வளர்பிறை சோமவார பிரதோஷம்

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

எத்தனை பிரதோஷங்கள்

பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

நந்தியிடம் வேண்டுதல்

சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல்‌ சிறப்பு.

வறுமை விலகும்

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்று ஆலயம் செல்ல முடியாத நிலை உள்ளதால் பூஜை அறையில் சிவன் படத்திற்கு வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்து வணங்கலாம்.

என்ன படைக்கலாம்

பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை சிவன் நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். வீட்டில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post