வில்வ வழிபாடும் அவற்றின் பயன்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வில்வ வழிபாடும் அவற்றின் பயன்களும் பற்றிய பதிவுகள் :

சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம். வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. 
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன. 

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்..

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு.‌ மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், 
ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

வில்வ வழிபாடும் பயன்களும் :

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்.

வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷட, வில்வம், கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது. 
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். 
எனவே இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் அடைவார்கள்.

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.

அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்க வில்வத்தை ஏற்றக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்லது.

வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும். அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம்மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். ‌வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை. ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன். வில்வம் பழந்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மே

இதன் பொருள்:

போகமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post