மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் :

கடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. 

ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். இது பலகாலமாக முன்னோர்களால் செய்யப்படும் சம்பிரதாயமான வழிபாடு ஆகும்.

பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழிபோல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, வழிபாடு செய்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.
 
குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தனை செய்து கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.
 
ஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வ சன்னிதியில் அல்லது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல், உலக்கை கொண்டு தன் வீட்டிலேயே பச்சரிசி மாவை இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னிதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும். 
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post