ஆனி மாத அமாவாசை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆனி மாத அமாவாசை பற்றிய பதிவுகள் :

அமாவாசை என்பது வழிபாடுகளில் மிக முக்கியமான நாள். அமாவாசை, முன்னோர்களுக்கான நாள் என்றும், முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

பித்ரு காரியங்களை எவரொருவர் தொடர்ந்து முறையே செய்து வருகிறாரோ அவர்களும், அவர்களின் வம்சத்தினரும் பித்ரு சாபத்தில் இருந்தும், பித்ருக்களின் கோபத்தில் இருந்தும் விடுபடுவார்கள். பித்ருக்களின் ஆசீர்வாதம் அவர்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது.

ஆனி மாத அமாவாசை தினத்தன்று அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு, உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் தர வேண்டும்.

உங்கள் வீட்டில் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் அல்லது எலுமிச்சை பழத்தின் மீது கற்பூரம் ஏற்றி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சை பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

ஆனி அமாவாசை திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் இந்த நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post