வாராஹி நவராத்திரி

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாராஹி நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி.

சப்தமாதர்களில் வராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும், இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் வளர்பிறை பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய... சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள்.

வராஹி தேவியின் திருநாமங்கள்... 1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி.

ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது.

பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வாராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.

சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு வைத்து அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் இட்டு வழிபடுவது சிறப்பு. 

மாதந்தோறும் வளர்பிறைதான் வராஹி வழிபாட்டுக்கு உகந்த அற்புத நாள். கோலம் போடுவது என்பது அம்பிகையை ஆத்மார்த்தமாக வரவேற்கும் வடிவம். 

லக்ஷ்மியின் வருகை தினமும் நிகழ வேண்டும். அனவரதமும் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் கோலமிடச் சொல்கிறது சாஸ்திரம். கோலமிட்ட வீட்டில் அம்பிகை மிகுந்த கனிவுடன் சுபிட்சத்தை வழங்க எழுந்தருள்கிறாள் என்பது ஐதீகம்!

மேலும் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியிலும் வராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றுங்கள். தேவியின் திருநாமங்களைச் சொல்லி உங்கள் பிரார்த்தனைகளை அவளிடம் சொல்லி முறையிடுங்கள்.

வளர்பிறை பஞ்சமி நாளில், வராஹியை நினைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். ஒரு பத்துநிமிடமேனும் அவளின் திருநாமங்களைச் சொல்லி, உங்கள் கோரிக்கைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லி மன்றாடுங்கள்.

இதுவரை உள்ள தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவாள். எதிர்ப்புகளை தலைதெறிக்க ஓடச் செய்வாள் வராஹிதேவி.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post