ஆடி அமாவாசை தர்ப்பணம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி அமாவாசை தர்ப்பணம் பற்றிய பதிவுகள் :

நமது சமயத்தில் அமாவாசை என்றாலே புனிதமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை மேலும் சிறப்பானதாக, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.

அமாவாசை வானியல் நிகழ்வும் :

இந்தியா வானியல் ஆராய்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நம் முன்னோர்கள் செய்துள்ளனர். நவீன அறிவியல் விளக்குவதற்கு முன்னரே கிரகங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.

வானவியல் கணிப்பின் படி சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை ஆகும். சூரியனை ‘பிதிர் காரகன்’ என்றும், சந்திரனை ‘மாதுர் காரகன்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் சூரியன், சந்திரனை பிதா, மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.

சூரியன் - சந்திரன் எப்படிப்பட்டவர்கள் :

சூரிய பகவான் ஆளுமை, ஆண்மை, வீரம், ஆற்றல் ஆகியவற்றை தரவல்லவர். அதே போல சந்திரன் மனோகாரகன். மனதிற்கு அதிபதியான இவர் ஒருவருக்கு மகிழ்ச்சி, தெளிவான மன நிலை, அறிவு, இன்பம், உற்சாகத்தை வழங்க வல்லவர். இத்தகைய அற்புத விஷயங்களைத் தரவல்ல இவர்கள் சேர்ந்து இருக்கும் அமாவாசை நாளில் பெற்றோரை இழந்தோர் வழிபாடு செய்வது வழக்கம்.

ஆடி அமாவாசை விரதம் :

2021 ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது.

அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை அமாவாசை நீடிக்கிறது.

மூன்று முக்கிய அமாவாசை :

அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு தன் வம்சம், தலைமுறை எப்படி இருக்கிறது என பார்க்க வருவதாக கூறப்படுகிறது. 

மகாளய அமாவாசை அன்று பூலோகத்தை பித்ருக்கள் வந்தடைகின்றனர்.

தை அமாவாசை தினத்தில் மீண்டும் பிதுர் லோகத்திற்கு நம் பித்ருக்கள் கிளம்புவதாக ஐதீகம்.

​ஆடி அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவை :

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, பின்னர் சிவாலயத்தில் எம்பெருமானை வழிபாடு செய்துவிட்டு, பிதிர் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். பிறகு அன்னதான செய்தல் ஆகியன இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும்.

இந்த அற்புத நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம்.

நாம் இந்த உலகிற்கு வர முக்கியமானவர்கள் நம் முன்னோர்கள். நம் முன்னோர்களை எப்போது மறக்கக் கூடாது. சாதாரணமாக நம் வாழ்க்கையில் நம்மை உயர்த்தி விடும் நபரை நாம் மறக்காத நிலையில், நமக்கு வாழ்க்கை கொடுத்த நம் பெற்றோர், முன்னோர்களை மறக்கக் கூடாது என்பதற்காக இந்த தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆன்மாவும் பாவமும், புண்ணியமும் செய்திருக்கும். அந்த ஆத்மாவிற்கு மேல் உலகில் எந்த மாதிரியான பலன் அனுபவிக்கிறார்கள் என தெரியாது. ஒருவேளை அவர்கள் மேல் உலகில் நல்ல பலனின்றி கஷ்டப்பட்டார்கள் என்றால், ஒவ்வொரு மாதமும் நாம் அமாவாசை அன்று எள், தண்ணீர் இரைக்கும் போது மேல் உலகிற்கு அவர்களுக்கு நல்ல வழியை காட்டும் என முன்னோர்கள் நமக்கு காட்டியுள்ள வழிமுறை.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதால் பிதுர்களின் தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

ஆடி அமாவாசை தினத்தில் கடல் அல்லது புனித நதி, ஆறு, நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் நம் பாவங்கள் நீங்கி நற்கதி அதாவது விமோசனம் அடைய முடியும் என்பது நம்பிக்கை.

நீர் நிலைகள் அருகில் இல்லாவிட்டால் பரவாயில்லை, வீட்டிலேயே ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு, பின்னர் 'ஓம் கங்கா தேவி நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு நாம் நீராடலாம்.

தர்ப்பணதிற்கு உரிய நாட்கள்:

மன்வாதி - 14 நாட்கள்
யுகாதி - 04 நாட்கள்
மாதப்பிறப்பு - 12 நாட்கள்
அமாவாசை0 12 நாட்கள்
மஹாளயா பட்சம்- 16 நாட்கள்

வ்யதீபாதம்- 12 நாட்கள்
வைத்ருதி - 12 நாட்கள்
அஷ்டகா - 4 நாட்கள்
அன்வஷ்டகா - 4 நாட்கள்
பூர்வேத்யு - 4 நாட்கள்

இந்த தினங்கள் முன்னோர்களை வழிபட உகந்த நாட்கள்.

இந்த தினங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள், முன்னோர்களைப் பற்றி, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபடக்கூடிய நாளாக இந்த ஆடி அமாவாசை தினம் பார்க்கப்படுகிறது.

பலன்கள்:

அமாவாசை தினத்தில் முன்னோருக்கு வழிபாடு நடத்துவது அவசியம். தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளும் நல் பலனை பெறுவார்கள்.

வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், அதை அருகில் உள்ள நீர் நிலைகளில் சேர்த்துவிடலாம்.

காகத்திற்கு உணவு வைப்பதன் பலன்கள்:

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைப்பதால், நம் வாழ்வில் தீரா கடன் தொல்லைகள் தீரும். புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும்.

காகம் நம் முன்னோர்களின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. அதோடு நம் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் போது முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியோர் கூறுகின்றனர்.

காக்கை சனி பகவானின் வாகனமாகும். காக்கைக்கு உணவளிப்பதால் சனி பகவான் மகிழ்ச்சி கொள்வார். அதோடு சனி பகவானின் சகோதரர் எம தர்ம ராஜன் ஆவார். எம தர்ம ராஜா காக்கை வடிவில் வந்து மனிதர்கள் வாழும் இடங்களில் அவர்களின் நிலையை அறிவாராம்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post