ஆருத்ரா தரிசனம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :

மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம். இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வருகின்றன. இதில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும். 

அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் இந்தத் திருவிழா பிரம்மோற்சவமாக நடைபெறும். அப்படிப்பட்ட அற்புதமான திருவாதிரைத் திருவிழா இன்று 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.

ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது. 

'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு 'ஈரமான', 'இளகிய', 'புத்தம் புதிய', 'பசுமையான' என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

திருவாதிரை விரதம்:

ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள். 

இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவ பெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன திருவிழா 11.12.2021 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த உற்சவ நாள்கள் அனைத்திலும் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும். அதேபோன்று அனைத்து நாள்களிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஈசன் அருள்பாலிப்பார்.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பிட்சாடனர் திருக்கோலம் 18.12.2021 அன்று நடைபெறும். மறுநாள் அதிகாலை தனுர் லக்னத்தில் சித் சபையில் ஶ்ரீ நடராஜ மூர்த்தி க்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். நிகழ்வின் 22 ம் தேதி தெப்போத்சவம் நடைபெறுவதோடு விழா நிறைவு பெறும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post