சிவனுக்காக அமைக்கப்பட்ட சிலைகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனுக்காக அமைக்கப்பட்ட சிலைகளைப் பற்றிய பதிவுகள் :

நாத்வாரா சிவன்

சுமார் 20 கிமீ தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக ஒரு சிவன் சிலை கிட்டத்தட்ட இப்போது கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப் பூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நாத்வாரா. இதன் உயரம் 251 அடியாக திட்டமிடப்பட்டு கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது.

ரிஷிகேஷ்

உத்தரகண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள இந்த சிவன் சிலை, கங்கை நதியின் கரையில் கண்கள் மூடிய நிலையில் தியானம் செய்வது போன்று காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்மாத் நிகேதன் ஆஸ்ரமத்தில் இருப்பதால் சிலையின் கம்பீரமும், ஆஸ்ரமத்தின் அமைதியும் நம்மை வேறொரு லோகத்துக்கு கொண்டுசென்றுவிடும். இந்த சிலையை கொண்ட பார்மாத் நிகேதன் ஆஸ்ரமதில் பக்தர்கள் தங்குவதற்காக 1000 அறைகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு. சிலையின் உயரம் 123 அடி

முருதேஸ்வர், கர்நாடகா

அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுர்சாகர் ஏரி

சுர்சாகர் ஏரியில் ஒரு சிவன் சிலை உள்ளது. இது குஜராத் மாநிலம் வதோதரா மாநகருக்கு அருகில் உள்ளது. சுர்சாகர் ஏரியில் அமைந்துள்ள அழகிய சிவன் சிலை மிகவும் பிரம்மாண்டமாக 120 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வாமித்ரா நதிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை நின்ற நிலையில் இருக்கிறது.

ஆதியோகி

கோயம்புத்தூர் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 112 அடி உயரமுள்ளதாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் இருக்கும் இடம் காடுகளை சுற்றி அமைந்துள்ளது.

நம்ச்சி, சிக்கிம்

நம்ச்சி என்றால் ‘வானுயரம்’ என்று அர்த்தம். அதேபோல அந்த நகரத்திலுள்ள சித்தேஷ்வர்தாம் எனும் இடத்தில் வானை முட்டும் உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக 108 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த சிவன் சிலை. மேலும் இந்த சிலை அமையப்பெற்றிருக்கும் சித்தேஷ்வர்தாம் பகுதியில் 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்கள் உள்ளன. அதோடு கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தை இந்த இடத்திலிருந்து பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்

மங்கள் மகாதேவ்

101 அடி உயரம் கொண்ட சிவன் சிலை ஹரியானாவின் கங்க்டான் எனும் பகுதியில் அமைந்துள்ளது.

பெங்களூர், கர்நாடகா

பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த சிவன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர்.

ஜபல்பூர், மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்தில் உள்ள கச்னார் எனும் இடத்தில் இந்த சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 76 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருப்பதுடன், கண்கள் மூடிய நிலையில் சாந்தசொரூபராக சிவபெருமான் காட்சி தருவது நம் கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்யும். மேலும் இச்சிலை அமைந்திருக்கும் கச்னார் பகுதி சில மாதிரி ஜோதிர்லிங்கங்களுக்காகவும் பிரபலம்.

பீஜாப்பூர், கர்நாடகா

உலகின் உயரமான சிவன் சிலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சிவன் சிலை பீஜாப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிவன் சிலை 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது. இன்னும் எண்ணற்ற சிவன் சிலைகள் இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ளன. அவற்றைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் அடுத்தடுத்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post