திருமணம் வரன் கைகூட ஆண்டாள் கடைபிடித்த விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருமணம் வரன் கைகூட ஆண்டாள் கடைபிடித்த விரதம் பற்றிய பதிவுகள் :

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.

மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.

கன்னிப் பெண்கள் தாங்கள் விரும்பும் கணவனை அடைய நோன்பு இருப்பது வழக்கம். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் நேரத்தில் (அதிகாலை 4 மணி முதல்) கன்னிப் பெண்கள் தங்கள் தோழியருடன் சென்று குளித்து, நல்ல கணவர் வேண்டும் என்று வழிபடுவதே இந்த நோன்பின் முக்கிய அம்சமாகும். மார்கழி மாதம் 30 நாளும் இந்த நோன்பை கடை பிடிப்பது விசேஷம் என்பதால் இதை மார்கழி நோன்பு, பாவை நோன்பு என்று கூறுகிறார்கள்.

திருப்பாவை பாடி மார்கழி நோன்பு இருந்து ரங்கநாதரை ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். ஆண்டாள் இருந்த விரதத்தை இப்போதும் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்தால் நல்ல கணவர் கிடைப்பார்.

கன்னிப் பெண்கள் தினமும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து நீராடி திருப்பாவை படிக்க வேண்டும். மார்கழி முதல் தேதியில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற பாடலை பாட வேண்டும். இப்படி திருப்பாவையின் 30 பாடலையும் பாட வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால் கடைசி நாள் (மார்கழி 29-ந்தேதி ஜனவரி 13 போகி தினத்தன்று) மட்டும் கடைசி 2 பாடல்களை பாட வேண்டும்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றிய கனவை எழுதியுள்ளார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து” என்று தொடங்கும் அந்த பாசுரங்களை மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் படித்தால் உடனே திருமணம் நடக்கும்.

வாரணம் ஆயிரம் பாடி முடித்ததும் பெருமாள், ஆண்டாள் படம் மீது பூ தூவி வழிபட வேண்டும். இதனால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து நல்ல கணவர் கிடைக்க அருள்வாள். திருமணத் தடைகள் இருந்தால் விலகி விடும்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post