வெற்றிலையின் முக்கியத்துவம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வெற்றிலையின் முக்கியத்துவம் பற்றிய பதிவுகள் :

ஏறத்தாழ இதய வடிவில் இருக்கும் வெற்றிலைக்கு அறிவியல் ரீதியாக இருக்கும் முக்கியத்துவத்தை போலவே ஆன்மீக ரீதியான முக்கியத்துவமும் அதிகம் உண்டு.

நமது மரபின் அனைத்துவிதமான பூஜைகள், சடங்குகள், விஷேசங்கள், நல்ல மற்றும் துக்க நிகழ்வுகள் என அனைத்திலும் வெற்றிலை தவறாது இடம் பிடிப்பதை நாம் காண்கிறோம்.

நம் மரபில் வில்வம், துளசி, அருகம்புல் போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களின் வரிசையில் நீங்காத இடம் வெற்றிலைக்கும் உண்டு. சமஸ்கிருதத்தில் வெற்றிலைக்கு தாம்பூலம் என்று பெயர். இறைவனுக்கு படைக்கப்படுவதில் தாம்பூலமும் ஒன்று.

வெற்றிலை குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், தேவர்களும் அரக்கர்களும் பாற்கடலை கடைகிற போது கிடைத்த பல அரிய பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. எனவே தூய்மை மற்றும் பரிசுத்தத்தின் அடையாளமாகவே வெற்றிலை கருதப்படுகிறது.

வெற்றிலையின் வடிவை ஒரு நிமிடம் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். நம் புராணங்களின் படி, இலையின் மேல் பகுதியில் இந்திரனும் சுக்கிரனும் வீற்றிருக்கின்றனர். இலையில் மத்தியில் சரஸ்வதி தேவியும், இலையின் அடிநுனியில் இலட்சுமி தேவியும் இருக்கின்றனர். இலையின் உள்ளே மஹா விஷ்ணுவும், இலைக்கு வெளியே சிவனும் காமதேனுவும், இலைக்கு இடப்புறத்தில் பார்வதி தேவி மற்றும் மாங்கல்ய தேவி வாசம் செய்கின்றனர், இலைக்கு வலப்புறத்தில் பூமாதேவி வாசம் செய்கிறார். இலை முழுவதும் சூரியனார் நிரம்பி இருக்கிறார்

அதனால் தான் வருகிற விருந்தினர்கள் நம் வீட்டிற்கு, விஷேசத்திற்கு வரும் போது வெற்றிலையில் மங்கள பொருட்கள் வைத்து கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி பெரியவர்கள் மற்றும் குருமார்களுக்கு தக்‌ஷணை அளிக்கும் போதும் வெற்றிலை தாம்பூலத்தில் தக்‌ஷிணை வைத்து கொடுப்பதும் இதனால் தான்.

அனைத்து தெய்வங்களும் அடங்கிய இந்த வெற்றிலையை ஒருவருக்கு கொடுப்பதால் அனைத்து தெய்வங்களின் நல்லருளும் அவர்களுக்கு பிராப்தம் ஆகட்டும் என்பது தார்பரியம்.

மேலும் முக்கிய நிகழ்வுகளில் கலசம் வைக்கும் பழக்கும் நம் மரபில் உண்டு. கலசத்தில் இடம்பெறும் முக்கிய பொருள் இந்த வெற்றிலையே. காரணம், வெற்றிலைக்கு நீரை சுத்திகரிக்கும் தன்மை உண்டு என்கின்றனர். ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்த்தால் பிறந்த குழந்தைக்கு வெற்றிலையை இளம்சூடாக்கி பத்தாக போடும் பழக்கம் நம்மரபில் உண்டு. இது சளி தொல்லை, வாய் துர்நாற்றம், பல் சார்ந்த நோய்கள், அல்சர் போன்ற உபாதைகளுக்கு தீர்வாகவும் உள்ளது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post