சிவனுக்கு உகந்த சோமவார விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனுக்கு உகந்த சோமவார விரதம் பற்றிய பதிவுகள் :

'சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும்.

சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.

16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது '16 சோமவார விரதம்" எனப்படுகிறது. இந்த சோமவார விரதத்தை மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேத்தியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும்.

இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். 

பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம்.

திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.

திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post