சகல பாவங்களையும் போக்கும் சனி பிரதோஷம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகல பாவங்களையும் போக்கும் சனி பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

சனி பகவான் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு சனி பிரதோஷத்தை முறையாக வழிபட்டால் நல்ல பலன்களை காணலாம். மேலும் வாழும் காலத்திலும், வாழ்ந்த பின்னரும் பிரச்சினைகள் இன்றி சுகபோக வாழ்வு அமைய, ஈசனை நோக்கி விரதமிருந்து வழிபடும் இந்த பிரதோஷ வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது. சகல, பாவங்களையும் போக்கும் இந்த சனி பிரதோஷத்தில் சிவனை எப்படி வழிபடுவது? என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கர்ம வினைகளுக்கு பலனாக சனி பகவான் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பாத சனி என்று விதவிதமாக நமக்கு தொல்லைகளை கொடுத்து வருவார். ஒருவர் நல்லது செய்தாலும் தீமை விளைவதும், தீமைகள் செய்தாலும் நல்லது நடப்பதும் அவரவரின் பாவ புண்ணிய பலன் ஆகும். இந்த துன்பங்களிலிருந்து சுலபமாக விடுதலை செய்யக் கூடிய இந்த அற்புத வழிபாடு தான் பிரதோஷ விரதம்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. அதில் சோமவார பிரதோஷம் எனப்படும் திங்கட் கிழமையில் வரும் பிரதோஷம், சனி பிரதோஷம் எனப்படும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் பிரசித்தி பெற்றது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடை பெற்று வருகின்றன.

இன்று தை மாதத்தில் வரக்கூடிய இந்த சனி பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். பின்னர் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சிவனை நினைந்து விரதம் இருக்க வேண்டும்.

இன்றைய நாள் முழுவதும் சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் நமச்சிவாய’ என்கிற மந்திரத்தை நீங்கள் வேலை செய்யும் பொழுது உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். பிரதோஷ காலம் என்பது 4.30 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டம் ஆகும். இந்த ஒன்றரை மணி நேரம் சிவாலயங்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். 

சோமசூக்த பிரதட்சணம் எனும் வலம் வருதலை மேற்கொண்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் கடந்து நல்ல நிலையை அடையலாம். சோமசூக்த பிரதட்சணம் என்பது தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகால விஷம் தோன்றியது. அந்த ஆலகால விஷம் கடலில் கலந்த பொழுது அங்குமிங்கும் தேவாசுரர்கள் ஓடி திரிந்தனர். இதே போல சோமசூக்த பிரதட்சணம் வித்தியாசமான முறையில் வலம் வருதலை குறிக்கிறது.

பிரதோஷத்தில் சிவாலயம் சென்றதும் முதலில் நந்தி பகவானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நந்தி பகவானை நோக்கி அதே வழியில் வந்து தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து வலது புறமாக சென்று சக்தியின் ஸ்வரூபமாக விளங்கும் கோமுகி என்னும் தீர்த்தத்தை அடைந்து அங்கு வரும் அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் மீண்டும் நந்தி பகவானை வந்தடைய வேண்டும். பிறகு மீண்டும் இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை தரிசித்து வந்த வழியே நந்தி பகவானை அடைந்த பின்னர் தான் சிவபெருமான தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு தரிசித்து பிரதோஷ பூஜையில் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து சிவாலயத்தில் அமர்ந்து பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து பதினொரு பிரதோஷங்கள் செய்வதன் மூலம் சகல விதமான பிரச்சனைகளும், நீங்கி சௌபாக்கியம் உண்டாகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post