ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி வரலாறு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி பற்றிய பதிவுகள் :

வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி இவள் ஆரிய வைசியர்களின் குலதெய்வமாக வணங்கப்படுகிறாள். ஆரிய வைசியர்கள் மற்றும் வைசிய செட்டியார்கள் என்று அழைக்கப்படும் இவர்களின் முக்கிய தொழில் வாணிபம் ஆகும்.

வரலாற்றுக் கதை

பெனுகொண்டா நகரை ஆண்டு வந்த குசுமஸ்ரேஷ்டி, குசுமாம்பிகை என்ற தம்பதியர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாகப் வாஸவாம்பா (வாசவி) என்ற பெண் குழந்தையும், விரூபாஷன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தனர்.

சித்திரகாந்தன் என்னும் கந்தர்வன் ஒரு முனிவரின் சாபத்தால் பூமியில் விஷ்ணுவர்த்தன் என்ற மன்னனாகப் இப்பூவுலகில் பிறந்து ஆண்டு வந்தான். அவன் வாஸவாம்பாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதில் ஏற்பட்ட பிரச்சனையில் பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களைச் சேர்ந்த வைசியர்களும் ஒன்றுகூடி விவாதித்தனர். 

இதில் 612 கோத்திரர்கள் விஷ்ணுவர்த்தனுக்கு வாஸவாம்பாவை மணமுடிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 102 கோத்திரத்தார் கூடாது எனவும் வாதிட்டனர். 

குலப்பெருமைக்கு மாறாக கருத்து தெரிவித்த 612 கோத்திரத்தாரர்கள் தம் குடும்பங்களுடன் நகரை விட்டு வெளியேறினர். விஷ்ணுவர்த்தனின் விருப்பத்திற்கு இணங்குவதில்லை என்ற முடிவு செய்து 102 கோத்திரத்தார் ஒருங்கிணைந்தனர்.

தன்னைக் காரணமாக வைத்து, வைசிய குலத்திற்குப் பெரும் சோதனையுண்டானதை எண்ணி மனம் வருந்திய வாஸவாம்பா, தன்னால் வைசிய குலத்திற்கு எவ்வித இழிவும் நேராமல் இருக்கத் தன்னை தானே அழித்துக் கொள்வதே சரியானது என்கிற எண்ணத்தில் தீக்குளித்து உயிரை விட முடிவெடுத்து அக்னிப்பிரவேசம் செய்தாள்.

வாஸவாம்பா அக்னிப்பிரவேசம் செய்வதை தாங்கமுடியாத 102 கோத்திரத்து வைசியர்களும் அவளுடன் சேர்ந்து தாங்களும் அக்னிபிரவேசம் செய்தனர். அதன் பிறகு வாசவி தன் உண்மையான ஆதிபராசக்தி ரூபத்தை மக்கள் அனைவருக்கும் அறியச் செய்து, ஒழுக்கம், தியாகம், தர்மங் போன்றவற்றை அவர்களுக்கு உபதேசித்து மறைந்தார் .

அன்றிலிருந்து வாஸவாம்பாவை, வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி எனக் கொண்டு வைசிய குலத்தார் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

பிரபரா வருடம், வசந்த காலம், வைசாக மாதம், சுக்ல பக்ஷம், தசமி திதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில், புனர்வசு நட்சத்திரமானது வாசவியின் ஜனனம் ஆகும்.

இந்த ஆண்டு சுபகிருது வருடம், வசந்த காலம், சித்திரை மாதம் 28 - ஆம் நாள், தசமி திதி புதன் கிழமை அன்று வாசவி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post