திருச்சி மலைக்கோட்டையின் சிறப்புகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருச்சி மலைக்கோட்டை பற்றிய பதிவுகள் :

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என்பது ஒரு பழங்கால மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை கோவில்கள் ஆகும். 

ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமய மலையைவிட பழமையானது.


திருச்சி மலைக்கோட்டையின் உயரம் 275 அடி ஆகும். மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்றழைக்கப்படுகிறது. இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. சுற்றுலா இடமாக கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.

மலைக்கோட்டையின் அமைப்பு :

பல்லவர்களால் சிறு குகைக் கோவிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோவிலில், இயற்கையாகவே அமைந்துள்ள அரண்களை நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோவில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் முக்கிய பங்கு அளித்தனர்.

இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்நாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.

இந்த மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவிலிருந்து பார்த்தால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், எழில்மிகு திருச்சி நகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும்.

மலைக்கோட்டையின் சிறப்புகள்:

இக்கோவிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் அழகாக தெரியும். இப்படி வடிவமைக்கப்பட்ட கோவிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.

திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இக்கோவிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்றது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post