சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீசக்கரம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீசக்கரம் பற்றிய பதிவுகள் :

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி 
சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ 
சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய 
ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய 
சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!!
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ!!!

யந்திரங்களில் எல்லா யந்திரங்களுக்கும் (கணபதி யந்திரம், முருகன் யந்திரம் முதலான) தலையாயது ஸ்ரீ சக்ர யந்திரம், எனவே யந்திர ராஜம் எனப்பெயர்.

அதுபோல நமது சமய வழிபாடுகளில் அனைத்து மந்திரங்களுக்கும் ஸ்ரீ வித்யா மந்திரமே தலையாயது என்பதால் மந்திர ராஜம் எனும் இவ்வழிபாடு சிறப்பு பெறுகிறது.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் நடராஜர் 14 தடவை தனது டமருகத்தை அடித்து ஒலி எழுப்பினார் . முதலில் ஒன்பது தடவையும் பின்னர் ஐந்து தடவையும் மங்கள ஒலி எழுப்பினார்.

ஒன்பது என்பது தேவிக்குரிய நவாக்ஷாரி
ஐந்து என்பது சிவனுக்குரிய பஞ்சாட்சரம். மேலும் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அன்னைக்குரிய இடது காலால் நடராஜர் அருள் பாலிக்கிறார்.

சக்திக்குரிய நவாக்ஷரி மந்திரத்தை முன்னிலைப்படுத்திய நடராஜர், அருள் பாலிப்பது சக்தியின் மூலமே என்பதைப் போல இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹாசாம்ராஜ்யம்.

இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.

ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கரர் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மகாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து "த்ரியம்பக" மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீகணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மஹாகாளியும், இடதுபுறம் மஹா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர்.

இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ர மஹாமேரு.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post