வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு பற்றிய பதிவுகள் :

(ஆடி 18 தேதி 03.8.2022) 

ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர்.

ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.

நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும்.அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர்.

இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.

ஆடிபெருக்கு பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன.

காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர். ஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.

காவிரி தமிழகத்தில் புகும் ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஆடி பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆயினும் சிறப்புமிகு பவானி சங்கமம் என்னும் மூன்று நதிகள் கூடும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆடிபெருக்கு அன்று கூடுவர்.

பவானி சங்கமத்தில் சங்கமேஸ்வரர் கோயிலில் காலை அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.

ஆடி மாதத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தில் ஸ்நானம் செய்வது நல்லது. ஏனென்றால் அநேக கனிமப் பொருட்கள் சங்கமிக்கும் இடமாக இது அமைவதால் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post