மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த அற்புத திருநாள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த அற்புத திருநாள் பற்றிய பதிவுகள் :

மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். 

இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.

மாதந்தோறும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள்.

இந்த அற்புதமான நாளில், காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள். சிவபுராணம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும்.

அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். 

திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம்.

மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக, விரதத்தை விட தானம் உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள்.

வீட்டில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். குடும்பமாக நமஸ்கரித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post