சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் ஏகாதசி வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் ஏகாதசி வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

ஆவணி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகிறது. இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் ஏராளமான பலன்கள் பெறலாம்.

மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.

ஏகாதசி விரதமுறை :

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். 

ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

ஏகாதசி விரத மகிமை :

சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post