மனக்கவலை போக்கும் ஆடி பிரதோஷம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மனக்கவலை போக்கும் ஆடி பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

தென்னாட்டவருக்கு சிவனாகவும், எந்நாட்டவருக்கும் இறைவனாக இருப்பவர் கயிலாயத்தில் இருக்கும் சிவபெருமான் ஆவார். சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்று, இறுதியில் மீண்டும் பிறவா நிலையான முக்தி பேறு கிடைக்கிறது.

அப்படி எல்லா வகையான நன்மைகளையும் தருகின்ற சிவ வழிபாடு செய்வதற்குரிய அற்புத தினமாக பிரதோஷ தினங்கள் இருக்கின்றன. அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

வழிபடும் முறைகள் :

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் அற்புதமான விசேஷ காலம் என்பார்கள். அந்த நாளில் ஈசனிடம் இருந்து வரங்களை பெற, அன்னை சக்தியே முன் நின்று பிரதோஷ பூஜைகள் செய்தாள் என்கின்றன புனித நூல்கள். இந்நாளில் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வதும் விசேஷம்.

ஆடி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து விட்டு, அன்றைய நாள் முழுவதும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண சுத்தியுடன் எப்போதும் சிவபெருமான் நினைவோடு இருப்பது சிறந்தது. பிரதோஷ தினங்களில் உணவு, நீர் ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பதே சிறந்தது. அவ்வாறு விரதம் இருக்க முடியாவிட்டால் அன்றைய தினம் பால் மற்றும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு சிவபெருமான் மற்றும் நந்தி தேவரின் அபிஷேகத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தேன் மற்றும் தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானமாக தந்து அவர்களை வணங்க வேண்டும்.

நவகிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு மல்லிகை பூக்கள் சாற்றி, தயிர் சாதம் மற்றும் கேசரி போன்றவற்றை நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

வழிபாடு முடிந்ததும் உங்களின் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை அன்னதானம் வழங்க வேண்டும்.

பலன்கள் :

இம்முறையில் ஆடி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்கும்.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

செல்வம் வளரும், நோய்கள் விலகும், மனக்கவலை அகலும்.

தொழில், வியாபாரங்களில் ஏற்படுகின்ற இடையூறுகள் நீங்கும்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post