சபரிமலையின் 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சபரிமலையின் 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் பற்றிய பதிவுகள் :

சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற 18 படிகள் என்பது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடந்து செல்ல வேண்டிய முக்கியமான பாதைகள்.

முதல் படி 

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷத யோகம். இதுவே முதல்படி.

இரண்டாம் படி 

பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

மூன்றாம் படி 

கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.

நான்காம் படி 

பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

ஐந்தாம் படி 

நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

 ஆறாம் படி 

கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி 

இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

 எட்டாம் படி 

எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி. 

ஒன்பதாம் படி 

கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி 

அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி 

பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி 

இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி 

எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.

பதினான்காம் படி 

யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி 

தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி 

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி 

சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி 

யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post