முருகப்பெருமானின் தனிச்சிறப்புகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முருகப்பெருமானின் தனிச்சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

சக்திதரர், கந்த சுவாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியர், கஜவாகனன், சரவணபவன், கார்த்திகேயன், குமாரசுவாமி, சண்முகன், தாரகாரி, சேனாபதி, பிரமசாத்தர், வள்ளி கல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர் என முருகப்பெருமானுக்கு 16 வகையான வடிவங்கள் உள்ளன.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது).

திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக இருக்கிறது.

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். சூரபதுமனை வதம் செய்தது -திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்தது – திருப்பரங்குன்றம், சிங்கமுகாசுரனை வதம் செய்தது -திருப்போரூர்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன் ‘ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம்’ ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

முருகப்பெருமான், கங்கையால் தாங்கப்பட்டவர். இதனால் ‘காங்கேயன்’ என்று பெயர் பெற்றார். சரவணப் பொய்கையில் உதித்தவர் என்பதால், ‘சரவணபவன்’ என்று பெயர் கொண்டார். 

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பார்வதிதேவியால் ஆறு உருவமும் ஓருருவமாக மாற்றப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் பெற்றார்.

தமிழகத்தில் முருகனுக்குக் குடவரைக் கோவில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோவில், மாமல்லபுரம்.

வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

முருகனுக்கு உருவமில்லாத கோவில், விருத்தாசலத்தில் உள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் பெயர் ‘கொளஞ்சியப்பர்’. அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

முருகன் சிறிது காலம் நான்முகனுக்கு பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post