தென்காசி காசிவிசுவநாதர் திருக்கல்யாண திருவிழா

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தென்காசி காசிவிசுவநாதர் திருக்கல்யாண திருவிழா பற்றிய பதிவுகள் :

தென்காசியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த அருள்மிகு உலக அம்மன் உடனாய காசி விஸ்வநாதர் ஆலயம். தென் கைலாசம் என்று இது அழைக்கப்படுகிறது. 

தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்து தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை பெரிய கோவில் என்று அழைப்பார்கள். தஞ்சையில் மூலவர் பெரிய சிவலிங்கமாக இருப்பார் அதேபோல் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் மூலவர் பெரிய திருமேனியில் அமைந்திருப்பார்.

ஆலய வரலாறு :

தென்காசியை ஆண்ட குறுநில மன்னனான பராக்கிரம பாண்டியன் ஆகாய மார்க்கமாக தினமும் கைலாசம் சென்று சிவனை தரித்து வந்தார். அப்போது அங்கிருந்து சிவனிடம் அனுமதி பெற்று ஒரு லிங்கத்தை எடுத்து வந்தார். அப்போது அந்த லிங்கத்தை எப்பகுதியிலும் இறக்கி வைக்கக் கூடாது என்ற நிபந்தனைடன் லிங்கத்தை கொடுத்து அனுப்பினார் சிவபெருமான்.

அதிகமான சுமையினாலும், நீண்ட தூரம் பயணம் செய்த அலுப்பினாலும் ஒரு இடத்தில் சிவலிங்கத்தை இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் இறக்கி வைத்து விட்டு மீண்டும் தூக்க முயன்ற போது லிங்கத்தை எடுக்க முடியவில்லை. தற்போது அந்த இடம் சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.

மன அழுத்தத்துடன் நாடு திரும்பிய பராக்கிரம பாண்டியன் பல்வேறு சிந்தனைகளுடன் தூங்கினான். அப்போது அவர் கனவில் தோன்றிய சிவபெருமான் நீ இருக்கும் இடத்தில் இருந்து சிற்றெறும்புகள் பாதைகளில் நீ பயணி என்று கூறி மறைந்து விட்டார்.

அவ்வாறு அப்பாதையில் பயணிக்கும் போது சிற்றெறும்பு கூட்டம் ஒரு செண்பகவனக்காட்டில் நின்று கொண்டு அதற்கு மேல் செல்லாமல் நின்றது. அதனை கவனித்த மன்னன் அப்பகுதியை தோன்டி பார்த்த பொழுது சிவலிங்கம் தென்பட்டது. 

அதனை தொடர்ந்து அப்பகுதியில் ஒரு கோவில் எழுப்புகிறான் அதுதான் தற்போது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும். 

திருவிழா :

இந்தக் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருக்கல்யாண திருவிழா புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாரதனை நடந்து.  

11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாள்தோறும் காமதேனு, சிம்மம், ரிஷபம், கிளி போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி நடைபெறுகிறது. 22ஆம் தேதி காலை ஆனைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை சுவாமி காசி விஸ்வநாதர் அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. 

அதனைத் தொடர்ந்து இரவு நடைபெறும் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post