நமது சமய சின்னமான திருமண்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நமது சமய சின்னமான திருமண் பற்றிய பதிவுகள் :


வைணவ சமயத்தில் நாமம் இட்டுக்கொள்வது வழக்கம். இதனை வைணவர்கள் ‘திருமண் காப்பு தரித்தல்’ என்கின்றனர். வைணவத்தின் முதல் கடவுளாக நாராயணன் (விஷ்ணு) வணங்கப்பட்டு வருகிறார். திருமண் எனும் திருநாமம் திருமாலின் பாதங்களைக் குறிக்கிறது. 

திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கின்றனர். இது மஹாலட்சுமியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உவர் மண் நம் உடையில் உள்ள அழுக்கை எப்படிப் போக்குகிறதோ, அதே போன்று, நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை இந்தத் திருமண் தூய்மையாக்குகிறது.

இறைவன் நாராயணனின் பாதத்தைக் குறிக்கும் இந்தத் திருமண், நம் உடல் ஒரு நாள் இந்த மண்ணோடு மண்ணாகிப்போகும் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அணியப்படுகிறது. அதனால் நாராயணின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்பதை அறிவுறுத்துவதுதான் திருமண் காப்பாகும். 

வைணவ நடைமுறையில் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உள்ளன. வடகலை வைணவத்தினர் மர்கட நியாயப்படி இறைவனை சரணாகதி அடைவதைக் குறிப்பதாகும். அவன் பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையேல், அவனுக்கு பெருமாளின் அருள் கிடைக்காது என்பது அவர்களின் நம்பிக்கை. வடகலை, தென்கலை என்ற இருபிரிவினர்களும் இருவேறு விதமாக நாமம் திருமண் இட்டுக்கொள்வர்.

தென்கலை திருமண் - திருமாலின் பாதம் வைத்துப் போடப்படுவது தென்கலை நாமம்.

வடகலை திருமண் - பாதம் இல்லாமல் வளைவாகப் போடப்படுவது வடகலை நாமம். நெற்றியில் நேர்கோடு போடுவது போல் இந்நாமம் இருக்கும்.

திருமண் இட்டுக்கொள்வதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.

திருமாலின் 12 பெயர்களை குறிக்கும் வகையில், உடலில் 12 இடங்களில் திருநாமம் இட்டுக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. அவை;

1. நெற்றி - நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘கேசவாய நம’ என்று சொல்ல வேண்டும்.

2. நடு வயிறு (நாபி) - நாபியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘நாராயணாய நம’ என்று சொல்ல வேண்டும்.

3. நடு மார்பு (மார்பு) - மார்பில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘மாதவாய நம’ என்று சொல்ல வேண்டும்.

4. நடுக் கழுத்து (நெஞ்சு) - நெஞ்சில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘கோவிந்தாய நம’ என்று சொல்ல வேண்டும்.

5. வலது மார்பு - வலது மார்பில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘விஷ்ணுவே நம’ என்று சொல்ல வேண்டும்.

6. வலது கை - வலது புயத்தில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘மதுசூதனாய நம’ என்று சொல்ல வேண்டும்.

7. வலது தோள் - வலது தோளி திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘திரிவிக்ரமாய நம’ என்று சொல்ல வேண்டும்.

8. இடது மார்பு - இடது நாபியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘வாமனாய நம’ என்று சொல்ல வேண்டும்.

9. இடது கை - இடது புயத்தில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘ஸ்ரீதராய நம’ என்று சொல்ல வேண்டும்.

10. இடது தோள் - இடது தோளில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘ஹ்ருஷீகேசாய நம’ என்று சொல்ல வேண்டும்.

11. பின்புறம் அடிமுதுகு - அடிமுதுகில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘பத்மநாபாய நம’ என்று சொல்ல வேண்டும்.

12. பின்புறம் பிடரி - பிடரியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘தாமோதராய நம’ என்று சொல்ல வேண்டும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post