காவடி வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காவடி வழிபாடு பற்றிய பதிவுகள் :

தமிழ்க்கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். 

அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். 

அகத்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். 

பழனி தலம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். 

ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணான்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். 

இடும்பன் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடினான். கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான். 

இதைக்கண்ட அகத்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். 

அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி, சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post