பஞ்ச பட்சி சாஸ்திரம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய பதிவுகள் :

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஐந்து பட்சிகளை அடிப்படையாக கொண்டது. மேலும், இந்த சாஸ்திரத்தின் மூலம் நடைபெற இருக்கின்ற செயல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

நாம் ஒரு செயலை செய்யும்பொழுது அதை நல்ல வேளையில் தொடங்கினால் அதன் பலன் நன்மையாகவே அமையும்.

அதைபோலவே பஞ்ச பட்சி சாஸ்திரமும் நாம் செய்ய எண்ணும் செயலை ஒரு நல்ல வேளையில் தொடங்குவதற்கு உதவக்கூடியது.

இதைக் கொண்டு நமது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல சூழல்களையும் எளிதான முறையில் உருவாக்கி கொள்ள முடியும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை பற்றி சிவபெருமான் பார்வதிதேவிக்கு கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் சென்றபோது பார்வதிதேவியார் தன் மகனான முருகனுக்கு இந்த சாஸ்திரத்தை பற்றி எடுத்துரைத்தார்.

இந்த சாஸ்திரத்தின் அடிப்படையில் முருகப்பெருமான் தமது திறனை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார். பின்பு இந்தக் கலையை அகத்திய முனிவருக்கு முருகப்பெருமான் கற்றுக்கொடுத்தார். அதன் வழியாக சித்தர்களும் கற்றுக்கொண்டனர்.

எந்தவொரு கலையாக இருந்தாலும் அதை நல்லமுறையில் பயன்படுத்துவது என்பது அவரவர்களின் கரங்களிலேயே அமைகின்றது. கலைகளை நல்லமுறையில் பயன்படுத்தும்பொழுது நம்முடைய ஈரேழு தலைமுறைகளும் நல்லமுறையில் வளர்ச்சி அடைகின்றன.

கற்ற கலையை தவறான எண்ணத்தோடு, தவறான பாதையில் பயன்படுத்தும்பொழுது நடைமுறையில் நாம் நல்லமுறையில் இருப்பதாக தோன்றினாலும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு நாம் செய்த செயல்களினால் ஏற்பட்ட எண்ணங்களின் விளைவுகள் நிழல்போல பின் தொடரவே செய்கின்றன. ஆகவே பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முடிந்த அளவு எவருக்கும் தீங்கிழைக்காத வகையில் பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் திறமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர் ஜோதிடத்தின் உதவிகளின்றி சுப தினங்கள் மற்றும் சுப நேரங்கள் போன்றவைகளை சரியான முறையில் அவர்களால் குறித்துக் கொடுக்க இயலும்.

'பட்சி அறிந்தவனை பகைத்துக் கொள்ளாதே' என்பது நமது முதுமக்களின் பழமொழியாகும். ஏனெனில் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்த ஒருவரை நாம் பகைத்துக் கொண்டால் அவர்கள் எதிரிகளான நம்மை எவ்விதத்தில் வெல்வார்கள் என்று நம்மால் எள்ளளவும் கணிக்க இயலாத ஒரு செயலாகும்.

ஒருவேளை நம்மீது பகை கொண்ட எதிரிகள் மறைமுகமான எதிர்ப்புகளை நம்மீது பயன்படுத்தும்பொழுது, பஞ்ச பட்சி சாஸ்திரம் அறிந்திருந்து அதை நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவராக இருக்கும் பட்சத்தில் அந்த மறைமுக எதிர்ப்புகளையும் நாம் எளிமையான முறையில் வெற்றி கொள்ள இயலும். 
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post