ராம நவமி விரத முறை, கொண்டாடும் முறை, பூஜை முறைகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராம நவமி பற்றிய பதிவுகள் :

பங்குனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீராமன் அவதரித்தார். அந்த வகையில் நவமி திதியில் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ராம நவமி விரத முறை :

ராமனை நினைத்து, அவனின் அருளைப் பெறும் வண்ணம் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து ராமனை பூஜித்து வழிபடலாம். ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது அவசியம். ஸ்ரீ ராமருடன் சேர்ந்து, சீதாதேவி, லட்சுமணன், ராம பக்தரும் போர்ப் படைத் தலைமைப் பொறுப்பாளர் அனுமன் ஆகியோரையும் வணங்க வேண்டும்.

ஆலயத்திற்கு சென்று ராமரை வணங்க முடியாத காரணத்தால், நாம் வீட்டிலேயே ராமரை வழிபட்டு அவரின் அருளைப் பெறலாம்.

வீட்டில் ராம நவமியை கொண்டாடும் முறை:

1. ராமபிரானின் சிலை வீட்டில் இருந்தால் அதற்கு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து விட்டு, பின்னர் அழகாக அலங்கரித்து மலர்களை சூடுங்கள்.

2. உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்களை எல்லாம் உச்சரிக்கவும். எதுவும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற எளிய மந்திரத்தை உச்சரித்து இறை அருளைப் பெற்றிடுங்கள்.

3. ராமாயண கதைகளைப் படிக்கலாம், ராம கீர்த்தனைகளைப் பாடலாம்.

4. ராமனின் கீர்த்தனைகள், கதைகளைப் படிக்கும் போது அருகில் ஒரு சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள். அங்கே அனுமன் வந்து ராம நாமங்களையும், கீர்த்தனைகளையும் கேட்பார், நமக்கு ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.

5. ராமனின் சிறிய சிலை இருந்தால், அதை தொட்டிலில் போட்டு ஆட்டலாம். ராமரின் பெருமையை உணர்த்தும் ராமாயணம் படிக்கலாம்

பூஜை செய்வது எப்படி?

காலையில் எழுந்ததும், குளித்து சுத்தப்படுத்திக் கொண்டு, ராமனை வழிபட்டு உங்களின் விரதத்தை தொடங்கலாம்.

ராமருக்கு சூட்ட மாலை, பூக்களும், பூஜிக்க வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பழங்கள், வெற்றிலை பாக்கு, இனிப்புகள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ராமரின் திரு உருவம் இருந்தால் அதற்கு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டவும்.

துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம்.

ராம நவமி அன்று இறைவனுக்கு பிரசாதமாக மோர், பானகம் படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தளவு இனிப்பு பதார்த்தங்களைத் தயார் செய்து பூஜைக்கு வைக்கலாம்.

குறைந்தபட்சம் இறைவனுக்கு பொரிகடலையில் சர்க்கரை கலந்து வைப்பதும், சிறிது சர்க்கரை கலந்த பால் வைப்பதும் நல்லது.

உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லி போற்றி வழிபடலாம்.

இறைவனுக்கு அலங்காரம் செய்தும், தீப தூப ஆராதனைகள் செய்தும் வழிபடுங்கள்.

பூஜைகள் முடிந்த பின்னர் ராம பூஜைக்கு வைக்கப்பட்ட சந்தனம், குங்குமத்தை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் கொடுங்கள். அதே போல பூஜைக்கு பயன்படுத்திய பிரசாதங்கள் மற்றும் பதார்த்தங்களை அன்புடன் அனைவருக்கும் அளித்திடுங்கள்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post