பாவங்களை போக்கும் பங்குனி உத்திரத்தின் மகிமைகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பாவங்களை போக்கும் பங்குனி உத்திரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :

தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம்.

உத்திர நட்சத்திரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது நம் வழக்கம். பல தெய்வத் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றதாக கருதப்படுகிறது.

பரமேஸ்வரனை பார்வதி கரம்பிடித்த நன்நாளிது. ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர். 

ஆண்டாள் ரெங்கமன்னார், நாராயணன் கோமளவல்லி நாச்சியார் ஆகியோரின் திருமணம் நடந்த நாளும் பங்குனி உத்திரம்தான்.

சபரிமலை ஐயப்பன் அவதாரம், அர்ச்சுனன் பிறப்பு, காரைக்கால் அம்மையார் முக்திபெற்றது பங்குனி உத்திரத்தன்றுதான்.

பங்குனி உத்திர நாளில், 'கல்யாணசுந்தர விரதம்' இருந்து வழிபட்டால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றும். இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அதனால் முருகனின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சியாக கடைபிடிக்கப்படுகிறது. 

பங்குனி உத்திர நாளில் நீர் மோர் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை பெரும் புண்ணியத்தைத் தரும். அதில் பழனியின் ரத ஊர்வலமும் மதுரைகள்ளழகர் கோயில் விழாவும் பிரசித்தி பெற்றவை.

இந்த நாளில் புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியில் உள்ள ஏழுபுனித தீர்த்தங்களில் ஒன்றானதும் புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது. அதனால் இந்நாளில் தீர்த்தவாரி மேற்கொண்டால் நம் சகல பாவங்களும் விலகி, மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். 

பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post