மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி அமாவாசை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி அமாவாசை பற்றிய பதிவுகள் :

ஆடி மாதத்தில் சந்திரன் ஆட்சி பெற்று கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்குக் காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்துத் திதி , கொடுப்பது நல்லது. தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

முக்திபேறு கிட்டும் ஆடி அமாவாசை விரதம் :

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டுவிரதம் முடித்தால், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. 

விரதம் இருப்பது எப்படி :

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று பெண்கள் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். 

பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். 

ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்தமாடுவது பாவத்தை போக்கி விமோசனம் அளிக்கும். அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடைவதாக ஐதீகம். 

முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவார்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். 

ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

Post a Comment

Previous Post Next Post