குழந்தை வரம் தரும் பலராம ஜெயந்தி

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குழந்தை வரம் தரும் பலராம ஜெயந்தி பற்றிய பதிவுகள் :

பலராமர் ஆதி சேசனின் அம்சம். பாற்கடலில் இறைவன் மகாவிஷ்ணுவை சுமந்து கொண்டு இருக்கும் அந்த ஆதிசேஷனே கிருஷ்ண அவதாரத்தின் போது கண்ணனின் அண்ணனாக பலராமராக அவதரித்தார்.

தேவகி வயிற்றில் கருவாகி உருவாகி அவதரித்தவர் பகவான் கண்ணன். அதே தேவகியின் வயிற்றில் கருவாகி மாயையினால் ரோகிணியின் வயிற்றில் வளர்ந்து அவதரித்தவர் பலராமர். ஆதிசேஷனின் அம்சமான பலராமர் எப்போதும் கண்ணனுக்கு சேவை செய்வதற்காகவே கிருஷ்ணருக்கு அண்ணனாகப் பிறந்தார் என்கின்றன புராணங்கள்.

எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கம்சன் தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து வைத்தான். வரிசையாக பிறந்த ஆறு குழந்தைகளை கொன்றான். 

ஏழாவதாக கருவுற்றாள் தேவகி, உடனே மகாவிஷ்ணு தனது மாயை மூலம் கருவை தேவகி வயிற்றில் இருந்து வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணி வயிற்றுக்கு மாற்றினார். ரோகிணியை பாதுகாப்பாக ஆயர்பாடியில் நந்தகோபரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்

பலசாலியான பலராமர்

கூடவே மாயை நந்தகோபரின் மனைவி யசோதாவின் வயிற்றில் கருவாகி உருவானாள். தேவகிக்கு ஏழாவதாக உருவான கரு கலைந்து போனதாக கம்சனிடம் கூறப்பட்டது. மீண்டும் எட்டாவதாக கர்ப்பமானாள் தேவகி. சில மாதங்களில் ஆயர்பாடியில் மறைந்திருந்த ரோகிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

பலசாலி என்று பெயர் சொல்லும் வகையில் பலராமன் என்று பெயர் சூட்டினர். கிருஷ்ண ஜெயந்திக்கு சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ந்த பலராம அவதாரம் கண்ணனுக்கு உதவி செய்யவே நிகழ்ந்தது

சிறையில் பிறந்த கண்ணன்

தேவகிக்கு சிறையில் எட்டாவதாக குழந்தை பிறந்தது. நள்ளிரவில் பிறந்த குழந்தை மகாவிஷ்ணுவின் அம்சமாக இருந்தது. அந்த நேரத்தில் உலகெங்கும் வெள்ளம் பரவியது. நட்சத்திரங்கள் பிரகாசமாக இருந்தன. 

பூமி எங்கும் சுபிட்சமாக இருந்தது. ஆறுகள் சலசலத்து ஓடின. பூமி எங்கும் அமைதியாக திகழ்ந்தது. அதர்மத்தை அழிக்கப் போகும் அவதாரம் நிகழ்ந்து விட்டது என்பதை இந்த பூமியே உணர்ந்து கொண்டது.

ஆயர்பாடிக்கு சென்ற கண்ணன்

கம்சனின் கையில் கண்ணன் சிக்காமல் இருக்க மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்த அந்த நடுநிசியில் இரவோடு இரவாக நந்தகோபரின் வீட்டுக்கு குழந்தையை கொண்டு சென்றார் வசுதேவர். யசோதாவிற்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது குழந்தையை மாற்றி வைத்து விட்டு வந்தார். 

ஆயர்பாடி மாளிகையில் கண்ணன் தனது அண்ணன் பலராமனுடன் ஆடி பாடி வளர்ந்தார். பசுக்களையும் ஆடு மாடுகளையும் மேய்த்துக்கொண்டு கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

பலராமன் கொன்ற அசுரன்

நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க கண்ணனைத் தேடி கோவர்த்தனகிரி தேடி வந்தான்.

பலராமனைத்தான் தனது அண்ணன் என்று எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன். மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். 

பலராமன் தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான். முதல் அசுர வதம் நிகழ்ந்தது.

Post a Comment

Previous Post Next Post