சகல செல்வங்களும் கிடைக்கச் செய்யும் சனிக்கிழமை விரத வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகல செல்வங்களும் கிடைக்கச் செய்யும் சனிக்கிழமை விரத வழிபாடு பற்றிய பதிவுகள் :

நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.

மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் முதல் சனிக்கிழமை அன்று விரதத்தை தொடங்கலாம்.

இவ்வாறு தொடங்கும் சனிக்கிழமை விரதத்தினை 11 வாரங்கள் முதல் 51 வாரங்கள் வரை தொடர்ந்து கடைபிடித்தால், உங்களின் பாவ பலன்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

நவகிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.

"சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" என்பது ஜோதிடப் பழமொழி.

அதனால் மக்களுக்கு சனிபகவானிடம் சற்று பயம் உண்டு. அவரவர் ராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் அந்த ராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால், சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்களை குறைத்து பல நன்மைகளைத் தருவார். இவற்றுள் ஏழரைச் சனி காலம் மிகவும் கஷ்டமான காலமாகும்.

சனிபகவான் விரத வழிபாடு :

சனிக்கிழமையன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டில் பூஜை செய்து, காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

மாலையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

சனிக்கிழமை விரதத்தின் பலன்கள் :

✓ சகல செல்வமும் கிடைக்கும்.

✓ சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும்.

✓ திருமண தடை நீங்கும்.

✓ பாவங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post