சோம வார விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோம வார விரதம் பற்றிய பதிவுகள் :

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி, உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனுக்கு சோம வாரப் பூஜை செய்துவந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி பெற்ற விரதமாயின் இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு இருக்கும் விரதங்களில் மகத்துவம் வாய்ந்த விரதமானது இந்த சோமவார விரதம். 

இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் எல்லா திங்கள் கிழமைகளிலும் இந்த விரதம் இருக்கலாம். அப்படி இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை மனைவி பெறலாம் என்பது நம்பிக்கை.

சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது.

சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

மேலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கள் கிழமை விரதம் இருந்தால் மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும். 

இவ்விரதமுறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாாகும்.பெற்றோரிடமோ அல்லது மாமனார் மாமியாரிடமோ அல்லது வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளலாம்.

திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம்.

நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post