புன்முறுவலுடன் காட்சிதரும் நடராஜர் சிலை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புன்முறுவலுடன் காட்சிதரும் நடராஜர் சிலை பற்றிய பதிவுகள் :

அண்ணாமலையார் ஆலயத்தில் 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தனித்துவம் கொண்டது.

இந்த செப்பு சிலை முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் முகத்தில் லேசான புன்முறுவல் காணப்படும். இந்த செப்பு சிலைக்கு வருடத்தில் 6 தடவை சிறப்பு அபிஷேகம் செய்கிறார்கள்.

அதில் ஆணித்திருமஞ்சனமும் ஆரூத்ரா தரிசனமும் மிகவும் விசேஷமானது. ஆயிரம்கால் மண்டபத்தில் வைத்து இந்த செப்பு சிலைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

4 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலையின் கழுத்தில் தாலி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அஸ்திர தேவர் செப்பு சிலையானது முன்பக்கம் விநாயகரையும், பின்பக்கம் ரிஷப வாகனரையும் கொண்டுள்ளது.

விழாக் காலங்களில் இந்த செப்பு சிலை பலி எழுந்தருள்பவராக பயன்படுத்தப்படுகிறார்.

திருநாவுக்கரசரின் செப்பு சிலை முழங்கால் வரை ஆடை அணிந்தபடி உழவாரப்படையுடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறது.

அவர் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் தொங்குகின்றன. திருஞான சம்பந்தர், சுந்தரரின் செப்பு சிலையும் இதேமாதிரி அழகுடன் உள்ளன.

மாணிக்கவாசகரின் செப்பு சிலை உச்சிக்குடுமி வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையில் பூனூல் அணிவிக்கப்பட்டு சின் முத்திரை காட்டும் நிலை உள்ளது. அவரது இடது கையில் ஓலைச்சுவடி உள்ளது.

அதில் "நமச்சிவாய" என்று எழுதப்பட்டுள்ளது. நால்வரின் இந்த சிலைகள் அனைத்தும் சுமார் 2 அடி உயரத்தில் உள்ளன.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுவதால் பள்ளியறை சுவாமியும் மலை வடிவான மூன்று சிகர அடுக்கின் மீது சிவலிங்கம் வீற்றிருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இதுபோன்று பள்ளியறை சுவாமியை காண இயலாது.

இப்படி சின்னச்சின்ன சிலைகள் விஷயத்தில் கூட திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் தனித்துவம் கொண்டு ஆச்சரியங்களின் உச்சமாக உள்ளது.

இந்த ஐம்பொன், செப்பு சிலைகளை உற்சவ காலங்களில் நீங்கள் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே ஒன்றாக ரசித்து தரிசிக்க முடியும்.

தீபாவளி அன்று நடத்தப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷமானவை.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post