துளசி தீர்த்தம் வழங்கி, சடாரி சாத்தப்படும் சிவ திருத்தலம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துளசி தீர்த்தம் வழங்கி, சடாரி சாத்தப்படும் சிவ திருத்தலம் பற்றிய பதிவுகள் :

பொதுவாக வைணவத் திருத்தலங்களில் தான் துளசி தீர்த்தம் வழங்கும் சம்பிரதாயமும், சடாரி சாத்தும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். ஆனால், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமநாதீஸ்வரர் சிவாலயத்தில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவதும் சடாரி சாத்துவதும் கடைபிடிக்கப்படுகிறது.  

இராமபிரான் சீதையைத் தேடி இலங்கைக்கு செல்லும் முன்பு நாற்பத்தி எட்டு நாட்கள் தவமிருந்து சிவபெருமானை பூஜித்த சிவாலயம் இது என்பதால் இத்திருத்தலத்தில் வைணவத் திருத்தல சம்பிரதாயமான துளசி தீர்த்தம் வழங்குவதும், சடாரி சாத்துவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இத்திருத்தலத்தில் சிவபெருமான் இராமருக்கு குருவாக விளங்கியமையால், வியாழக் கிழமைகளில் நடைபெறும் குரு தோஷப் பரிகார பூஜைகள் அனைத்தும் சிவபெருமானுக்கே செய்யப்படுகிறது.  

இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மை சன்னதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் நெல்லிக்காய் பிரசாதம், பக்தர்களின் ஆயுளை விருத்தி செய்வதாக நம்பப் படுகிறது.

நவக்கிரகங்கள் இத்திருத்தலத்தில் தங்களின் துணைவியாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு. ஸ்ரீ இராமநாதீஸ்வரரை வணங்கினால், குரு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் நாற்பத்தி எட்டு நாட்கள் விரதமிருந்து ஸ்ரீ இராமநாதீஸ்வரரையும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

திருமணத் தடை தோஷம் உள்ளவர்களும் நாற்பத்தி எட்டு நாட்கள் விரதமிருந்து ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ இராமநாதீஸ்வரரை வழிபட்டால், திருமணம் கைகூடுமாம்.

அம்மை அப்பனை திராட்சை மாலை சாத்தி வழிபடுவது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பு.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post