பொங்கல் பண்டிகை 2024

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பொங்கல் பண்டிகை பற்றிய சிறப்பு பதிவுகள் :

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல பெயர்களிலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் மிகப் பெரிய அளவில் அறுவடை நாளாக கொண்டாடப்படுவது வழக்கம். 

சூரியன் வடக்கு நோக்கு தனது பயணத்தை துவங்கும் இந்த நாள், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி துவங்கி, ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு போகி பண்டிகை ஜனவரி 14ம் தேதியும், தைப் பொங்கல் ஜனவரி 15ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன.

4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் :

✓ போகி பண்டிகை

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கலாக கொண்டாடப்படும். பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி பண்டிகை ஆகும். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை நீக்கி விட்டு, புதியவற்றை வரவேற்க தயாராகும் நாளாகும்.

✓ சூரிய பொங்கல் - 

பொங்கல் பண்டிகையின் 2ம் நாள் சூரிய பொங்கல் ஆகும். உழவு தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு விருந்து படைத்து, நன்றி செலுத்தும் நாளாக இந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

✓ மாட்டு பொங்கல்

உழவு தொழிலுக்கு உற்ற துணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தி, அவைகளுக்கு உரிய மரியாதை அளித்து, வணங்கிடும் நாளே மாட்டு பொங்கலாகும்.

காணும் பொங்கல் - 

பொங்கல் பண்டிகையின் நான்காவது மற்றும் கடைசி நாளாக கொண்டாடப்படுவது காணும் பொங்கலாகும். இந்த நாளில் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கு சென்று அன்பினையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டு, உறவை பலப்படுத்தும் நாளாகும்.

சர்க்கரை பொங்கல் வைக்க காரணம் :

பொங்கல் பண்டிகையின் போது தெருக்கள் முழுவதும் வண்ணமயமாக கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரித்து, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி, சிறப்பாக கொண்டாடப்படும். 

புதுப்பானையில் புதிய அரிசியில் பருப்பு, வெல்லம் கலந்து பொங்கல் செய்து சூரிய பகவானுக்கும், இறைவனுக்கும் படைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை என்றாலே நினைவிற்கு வரும் உணவு சர்க்கரை பொங்கல் தான். 

பொங்கலன்று சர்க்கரை பொங்கல் வைத்து படைப்பதற்கு மிக முக்கிமான காரணம் உண்டு. அதாவது அரிசி என்பது செல்வ வளத்தின் அடையாளமாகும். பருப்பு, வலிமையையும், வெல்லம் இனிமையையம் குறிக்கக் கூடியதாகும். 

வரப்போகும் வசந்த காலத்தில் விளைச்சல் அமோகமாக அமைந்து செல்வ வளமும், அதன் வழியாக வாழ்வில் வலிமையும், இனிமையும் பொங்கி பெருக வேண்டும் என்பதை சர்க்கரை பொங்கல் வைப்பதற்கான காரணமாகும்.


Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post