நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து படி தாண்டாப் பத்தினி - பெருந்தேவி தாயார் பற்றிய பதிவுகள் :
தனிச் சந்நிதியில் பெருந்தேவி தாயார், கல்யாண கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி இரு தாமரை மலர்களை ஏந்தி, அபய - வரத கரங்களுடன், பட்டாடை- அணிமணிகளுடன் பொன் மகுடம் தரித்து, அமர்ந்த கோலத்தில் கருணை நாயகியாகக் காட்சி தருகிறார்.
'மஹா தேவ்யை' என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார். இவருக்கு அரித்ரா தேவி, மகாதேவி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமகள், பிருகு மகரிஷியின் புத்திர காமேஷ்டி யாகத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயாராக அவதரித்து, பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரை பூஜித்து வந்தாராம். அவருக்கு அருள் புரிய திருவுளம் கொண்டார் பெருமாள்.
அதன்படி- பரமசிவன், பிரம்மர், பிருகு மகரிஷி, காசிபர், கண்வர், காத்தியாயனர், ஹரிதர் முதலிய முனிவர்கள் மற்றும் தேவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெருந்தேவியின் கரம் பற்றினாராம் வரதராஜர்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார். பெருந்தேவி தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. எனவே தாயாரை, 'படிதாண்டாப் பத்தினி' என்பர்.