பைரவ வழிபாட்டு பலன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பைரவ வழிபாட்டு பலன்கள் பற்றிய பதிவுகள் :

தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாகும். பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால் நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள்.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். 

இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபம் ஆவார். இவர் சிவன் கோவில்களில் வடகிழக்குப் பகுதியில் நின்றவாறு காட்சியளிப்பார்.

பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.

பைரவரை வழிபட ஏற்ற நட்சத்திரங்கள் :

அஷ்டமி திதியில் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். 

ஞாயிற்றுக்கிழமை :

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வந்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தவர்களின் கடன் தொல்லைகள் நீங்கும். 

மேலும் இந்த கிழமைகளில் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி வடமாலை போட்டு வழிபட்டு வந்தால் மேலும் பல நன்மைகள் நடக்கும். இந்தக் கிழமைகளில் சிம்ம ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

திங்கட்கிழமை :

திங்கட்கிழமையன்று வில்வ இலை கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வர சிவன் அருள் கிட்டும். சங்கடர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாற்றி வழிபட்டு வந்தால் கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இந்தக் கிழமைகளில் கடக ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

செவ்வாய்க்கிழமை :

செவ்வாய் கிழமையன்று மாலை வேளையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வம் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட உகந்த நாளாகும்.

புதன் கிழமை :

புதன் கிழமையன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பூமி, நிலம் சம்மந்தப்பட்ட லாபங்கள் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பாகும்.

வியாழக்கிழமை :

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பைரவருக்கு மனமுருகி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் ஏவல், பில்லி சூனியம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இந்தக் கிழமைகளில் தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு.

வெள்ளிக்கிழமை :

வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் பைரவருக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகி சகல ஐஸ்வர்யமும் கிட்டும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு.

சனிக்கிழமை :

சனி பகவானின் குருவான பைரவருக்கு சனிக்கிழமைகளில் பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டம சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமசனி போன்ற சனி பகவானின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு நன்மைகள் அடையலாம். 

இந்தக் கிழமைகளில் மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும். மேற்கண்ட நாட்களில் பைரவரை வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post