திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருநள்ளாறு சனீஸ்வர பகவான் பற்றிய பதிவுகள் :

நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த சனிபகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ள இடம்தான் திருநள்ளாறு.

சனிபகவானின் சக்தி வாய்ந்த திருவுருவச் சிலையைக் கொண்ட கோவில் என்றால் அது திருநள்ளாறு தர்பாரேண்யேஸ்வரர் கோவில்தான். இக்கோவிலின் மூலவர் சிவபெருமான் ஆவார்.

திருச்சி, திருவாரூர் வழியாக காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம். திருநள்ளாறு தர்பாரேண்யேஸ்வரர் புண்ணியத் தலத்திற்கு, பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பக்தியோடு வழிபட்டுச் செல்கின்றனர்.

திருநள்ளாறு தீர்த்தங்கள் :

1. பிரம்ம தீர்த்தம்

2. வாணி தீர்த்தம்

3. அன்ன தீர்த்தம்

4. அகத்திய தீர்த்தம்

5. நள தீர்த்தம்

6. நளகூப தீர்த்தம்.


பிரார்த்தனைகள் :

சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி, சனிபகவானிற்கு திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 

வழிபடவேண்டிய முறை : 

அதிகாலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நள விநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு, பின்னர் கோவிலில் உள்ள கங்கா தீர்த்தக்குளத்தை வணங்க வேண்டும். அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும்.

பின், சனிபகவானின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும். முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும். பிறகு காளத்திநாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பாரேண்யேஸ்வரரை தரிசிக்க வேண்டும். 

அதன் பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகதலிங்கத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும், துர்க்கையையும் மற்றும் சண்டிகேஸ்வரரையும் தரிசித்து வெளிப்பிரகாரத்திற்கு செல்ல வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post