சில வினாடிகள் மட்டும் தரிசனம் அருளும் சிவன் ஆலயம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சில வினாடிகள் மட்டும் தரிசனம் அருளும் சிவன் ஆலயம் பற்றிய பதிவுகள் :

சில வினாடிகள் மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான் திருமாணிக்குழி என்ற ஊரில் வாமனபுரீஸ்வரர் கோவிலில் இருக்கிறார்.

இறைவனின் பெயர் வாமனபுரீஸ்வரர். இறைவி பெயர் அம்புஜாட்சி. தல விருட்சம் கொன்றை மரம்.

இந்த கோவில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக கூறப்படுகிறது. தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும் அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வ காலமும் பார்வதியுடன் இணைந்து இருப்பதால் இங்கு இறைவனை நேரடியாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.

பொதுவாக அனைத்து சிவன் கோவில்களிலும் பூஜை நேரத்தில் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் இந்த தலத்தில் இரண்டு, மூன்று வினாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்துவிட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார். 

இறைவனும் இறைவியும் இணைந்து இருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11 ருத்திரர்களில் ஒருவரான பீம ருத்ரர் திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குதான் முதல் அர்ச்சனை பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. 

விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதா ஆயுதமும் தாங்கி இருக்கிறாள்.

வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகஸ்திய முனிவர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்பு லிங்கமாக கோவில் கொண்டுள்ளார். 

இந்த தலத்தில் உள்ள யுகலிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர் நடராஜர், சப்த மாதர்கள், அறுபத்து மூவர் சன்னதிகள் விசேஷமானவை. மேலும் கோவிலுக்கு எதிரில் உள்ள மலை செம்மலையாக காட்சி அளிக்கிறது. 

இந்த தலத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்றும்போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வது போலவே இருக்கும் இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி புஷ்பகிரி, ஔஷதகிரி என்ற பெயர்களும் உண்டு. இங்கு உள்ள தக்ஷிணாமூர்த்தி நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத் துணியுடன் அம்மனை 11 முறை சுற்றிவர வேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணை நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

இந்த தலத்தில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு திருவண்ணாமலையில் கார்த்திகைக்கு ஜோதி தெரிவது போல் ரோகிணியில் தீப தரிசனம் நடைபெறுகின்றது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post