யோகினி ஏகாதசி 2024

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து யோகினி ஏகாதசி பற்றிய பதிவுகள் :

பெருமாளின் அருளை பெறுவதற்கும், பாவங்களை போக்கிக் கொள்வதற்கும் ஏற்ற விரத நாள், ஏகாதசி விரதமாகும். 

ஒரு மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன. ஆனால் அதியாகமத்தில் 26 ஏகாதசி விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. 

அனைத்து ஏகாதசிகளும் பெருமாளுக்கு மிகவும் விருப்பமானது என்றாலும் ஒரு சில ஏகாதசிகள் மட்டும் அதிக விசேஷமானதாகும். அப்படி ஆனி மாதத்தில் வரும் யோகினி ஏகாதசி பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல் ஆனி மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் மிகவும் உயர்வான சிறப்பு உள்ளது. ஆனி மாத தேய்பிறை ஏகாதசிக்கு யோகினி ஏகாதசி என்று பெயர். 

எவர் ஒருவர் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களும் ஏற்படும். நிர்ஜல ஏகாதசிக்கு பிறகும், தேவஷயனி ஏகாதசிக்கு முன்பும் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி ஆகும்.

யோகினி ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்காமல் விடுபடுவார்கள். ஒரு யோகினி ஏகாதசி விரதம் இருந்தால், 88,000 அந்தணர்களுக்கு அன்னதானம் அளித்த புண்ணிய பலன் கிடைப்பதுடன், வைகுண்ட பதவியும் கிடைக்கும் என புராணங்கள் சொல்கின்றன. 

இப்படி உயர்வான சிறப்பு மிக்க யோகினி ஏகாதசி இந்த ஆண்டு ஜூலை 02ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஜூலை 01ம் தேதி காலை 11.26 துவங்கி, ஜூலை 02ம் தேதி காலை 09.24 வரை ஏகாதசி திதி உள்ளது.

சூரிய உதயத்தை வைத்தே ஏகாதசி கணக்கிடப்படுவதால் யோகி ஏகாதசி ஜூலை 02ம் தேதி தான் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு யோகினி ஏகாதசி விரத நாளில் திரிபுஷ்கர் யோகம் மற்றும் சர்வசித்தி யோகம் ஆகியன சேர்ந்து வருவதால் இது தவற விடக் கூடாத முக்கியமான ஏகாதசி விரதமாக சொல்லப்படுகிறது.

பத்ம புராணத்தின் படி, யோகினி ஏகாதசி அனைத்து விதமான பாவங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கக் கூடியது. இந்த விரதத்தை கடைபிடித்தால் ஏராளமான யாகங்களை கடைபிடித்த பலன் கிடைக்கும். 

இந்த ஏகாதசியில் லட்சுமி நாராயணரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவு வழங்குவதும், மற்றவர்களின் தாகத்தை தீர்ப்பதும் மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். 

இந்த நாளில் இரவில் கண் விழித்து விரதம் இருப்பதால் செல்வ வளம், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து விதமான இன்பங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. யோகினி ஏகாதசி அன்று பெருமாளுக்கு விருப்பமான மஞ்சள் நிற ஆடை அணிந்து, மஞ்சள் நிற மலர்கள் சூட்டி வழிபடுவது பெருமாளின் முழுமையான அருளை பெற்றுத் தரும். 

துளசி இலைகள் படைத்து பெருமாளை நிவைத்து ஏகாதசி விரதத்தை கடைபிடித்து, மறுநாள் விரதத்தை நிறைவு செய்வது பெருமாளின் அருளை பெற்றுத் தரும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post