சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி விரதம் பற்றிய பதிவுகள் :

நாம் வாழ்வில் நல்ல காரியங்களை செய்தால் நன்மைகளையும், தீய காரியங்களை செய்தால் தீமைகளையும் அனுபவிக்கின்றோம். இவற்றை கர்மவினைகள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

எப்படிப்பட்ட கர்மவினைகளையும் தீர்க்கும் அனைத்து உலகங்களுக்கான நாயகனாக இருக்கிறார் விநாயகப்பெருமான்.

விநாயகப்பெருமானை சதுர்த்தி தினத்தில் வழிபட்டால் நாம் பெறாத நன்மைகளே இல்லை என கூறலாம். சதுர்த்தி விரதம் குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு முன்னதாக, பிள்ளையார் சுழி போட்டு தொடங்குபவர்கள் அதிகம்.

விநாயகர் என்பவர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி ஆகும். பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் என்பது நம்பிக்கை.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்கிலபட்சம் வளர்பிறை சதுர்த்தியை 'வர சதுர்த்தி' என்றும், கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தை அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி தினம் எனப்படுகிறது.

சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல் மிகவும் நல்லது.

ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒருவிதமான பலன்களை தரும் சக்தி இருக்கின்றது. ஆனால் கணபதியை வணங்கினால் அனைத்து சக்திகளை பெற முடியும். வினை தீர்ப்பவன் விநாயகன். விநாயகரை வணங்கி நன்மைகளை பெறுவோம்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விரத முறைகள்

சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

சதுர்த்தியன்று மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

பலன்கள்

நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும். வீட்டில் நிம்மதியற்ற நிலை மாறி அமைதி, மகிழ்ச்சி ஏற்படும். பகைமைகள் நீங்கி சமரசம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக வெற்றி பெறும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post