அன்னபூரணி விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அன்னபூரணி விரதம் பற்றிய பதிவுகள் :

உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்க அருள்புரியும் தெய்வம் ஸ்ரீஅன்னபூரணி தேவி. அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும்.

அன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும், எதற்கும் பஞ்சம் ஏற்படாது.

குடும்பத்தில் பட்டினி, பசி, நோய், வறுமை, தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். அன்னபூரணி தேவியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.

அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும். பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம்.

அன்னபூரணி விரதம் இருக்கும் முறை:

அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி மனத்தூய்மையுடன் அன்னபூரணியை வேண்டி தங்களது துயரம் தீர பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

காலை முதல் மாலை வரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மாலை ஆறு மணியளவில் பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

பூஜையறையை சுத்தம் செய்து பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.

ஒரு மணப்பலகையின் மீது வெள்ளை துணியை போட்டு அதன்மீது ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி, தானியங்களை வைக்க வேண்டும்.

பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலையை வைக்க வேண்டும்.

அன்னபூரணி விரதத்தில் வெற்றிலை பாக்கு, தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்.

அன்னபூரணிக்கு வாசனை மலர்கள், பழங்கள் மற்றும் இனிப்பு நைவேத்தியம் வைத்து, தூபங்கள் காட்ட வேண்டும்.

நைவேத்தியமாக அன்னபூரணிக்கு பிடித்த உணவான பாயசத்தை வைத்து வழிபடலாம். உலர் பழவகை, வாழைப்பழம், கற்கண்டு வைத்து வழிபடலாம்.

பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும்.

அவளிடம் நம்முடைய சரீரத்தில் உள்ள முக்குணங்களின் தோஷங்களையும் நீக்க வேண்டி மூன்று தீபம் ஏற்றி அன்னபூரணியை வழிபட வேண்டும்.

கை நிறைய புஷ்பங்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதக்கமலங்களில் சமர்ப்பித்து நான்கு முறை நமஸ்கரிக்க வேண்டும்.

அன்னபூர்ணாஷ்டகம், அன்னபூர்ணாபஞ்சரத்னம் போன்ற ஸ்லோகங்களை தெரிந்தவர்கள் கூறி வழிபடலாம்.

பிறகு கண்களை மூடியபடி, உள்ளமுருக பிரார்த்திக்கவும். முடிவில் அன்னபூரணியின் பாதக்கமலங்களில் பூஜையை சமர்ப்பிக்க வேண்டும்.

அன்னபூரணிக்கு தீபாராதனை காட்டி வழிபட்டு பூஜை முடித்த பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு, விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

முடிந்தால் இந்த அன்னபூரணி பூஜை முடித்த பிறகு வசதி குறைந்தவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை பிரார்த்தித்து வேண்டிய வரத்தை பெறுவோம். 

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post