ஆடி மாதம் கடைசி வெள்ளி சுமங்கலி பூஜை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாதம் கடைசி வெள்ளி சுமங்கலி பூஜை பற்றிய பதிவுகள் :

ஆடி மாதத்தில் ஒரு சில விஷேச தினங்களும், திதிகளும் இருந்தாலும் ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதுவும் அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்தாலோ அல்லது திருமணமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற அளவு தாம்பூலம் கொடுத்தாலோ உங்கள் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம். 

ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை செய்வது அம்பாளை குளிர்விக்கும். இதுகுறித்து விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு சில குடும்பங்களில் சுமங்கலி பூஜை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. சுமங்கலி பூஜைக்கென்றே பிரத்தியேகமாக விருந்து தயார் செய்வார்கள். ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.

உங்களுக்கு சுமங்கலி பூஜைக்கு தயார் செய்ய முடியவில்லை அல்லது விருந்துக்கு தயார் செய்ய முடியவில்லை அல்லது அந்த அளவுக்கு வசதி இல்லை என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெண்களை தாம்பூலம் வாங்குவதற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, இரண்டு வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து, தாம்பூலம் கொடுத்து, ஆசி பெறலாம்.

வசதி இருப்பவர்கள், தாம்பூலத்தில் கூடுதலாக, மருதாணி, தேங்காய், கண்ணாடி, சீப்பு, பழங்கள், ஜாக்கெட் துணி மற்றும் புடவை ஆகியவற்றை வைத்துக் கொடுக்கலாம். வீட்டுக்கு யாரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள், தவறாமல் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து, அம்மனுக்கு புடவை சாற்றலாம் அல்லது கோவிலில் உள்ள பெண்களுக்கு தாம்பூலம் வழங்கலாம்.

குத்து விளக்கு பூஜை:

பெரும்பாலான அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியன்று நாள் முழுவதும் வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதில், குத்து விளக்கு பூஜை நடைபெறும் அம்பாள் ஆலயத்தில் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

ஆடி வெள்ளி விரதம்:

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அம்மனின் அனுக்கிரகம் கட்டாயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. விரதமிருப்பவர்கள், காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி, தீபாராதனை செய்து ஏதேனும் ஒரு பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கலை நைவேத்யம் செய்ய வேண்டும். அதன் பிறகு மாலையிலும் அதேபோல விளக்கேற்றி, பின்னர் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.

வீடு சுபிட்சமாக, தடைகள், நோய்கள் நீங்க, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். அனைத்து விதமான தோஷங்களும், கண் திருஷ்டி உள்ளிட்ட எதிர்மறையான ஆற்றல் விலக, அபிராமி அந்தாதி பாடல்களை பாராயணம் செய்யலாம். கடன் மற்றும் வறுமை நீங்கி, செல்வம் தழைத்து வளர, கனக தாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post