நவராத்திரி எட்டாம் நாள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி எட்டாம் நாள் பற்றிய பதிவுகள் :

நவராத்திரியின் அனைத்து நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், எட்டாம் நாளும் மிக முக்கியமான தனிச்சிறப்பு ஒன்று உள்ளது. அப்படி இந்த நாளுக்கு என்ன சிறப்பு உள்ளது, இந்த நாளில் அம்பிகையை எந்த வடிவில், எப்படி வழிபட வேண்டும், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி வழிபாட்டின் நிறைவு பகுதியை எட்டி உள்ளோம். அதே சமயம் இது மிகவும் சக்தி வாய்ந்த, உடனடி பலன் தரும் வழிபாட்டு நாட்களாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முக்கியமானது என்றாலும் அவற்றில் மிகவும் சிறப்புக்குரியதாகவும், சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுவது எட்டாம் நாள் வழிபாடு ஆகும். 

இது அம்பிகை ஆக்ரோஷமாக அசுரர்களை வதம் செய்த நாளாகும். தன்னுடைய பக்தர்கள் மீது உள்ள அளவு கடந்த கருணையின் காரணமாக, பக்தர்களை துன்புறுத்தும் தீமைகளை சம்ஹாரம் செய்யும் காலமாகும்.

இந்த ஆண்டு நவராத்திரியின் 8ம் நாள் அக்டோபர் 10ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளுக்குரிய மிக முக்கியமான சிறப்பு, நவராத்திரியில் துர்கை வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படும் துர்கா அஷ்டமியாக சொல்லப்படுவது இந்த எட்டாம் நாளை தான். 

இந்த நாளில் நம்முடைய கடந்த கால தவறுகளுக்காக அம்பிகையிடம் மனதார மன்னிப்புக் கேட்டு, மனம் உருகி வழிபட்டால் அவற்றிற்கு மன்னிப்பு கிடைத்து, நம்முடைய மனதும், ஆத்மாவும் சுத்தமடைந்து புதிய வாழ்க்கையை துவக்குவதற்கான நாளாக நவராத்திரியின் எட்டாம் நாள் கருதப்படுகிறது.

நவராத்திரியின் எட்டாம் நாள் என்பது தெய்வீக சக்தியுடன் நம்மை இணைத்து கொள்வதற்கான மிக முக்கியமான நாளாகும். நவராத்திரியின் எட்டாம் நாளே கன்னியா பூஜை செய்வதற்கு மிகவும் ஏற்ற நாளாக சொல்லப்படுகிறது. தூய்மை, கள்ளம் கபடம் இல்லாத மனம் ஆகியவை குழந்தைகளின் அடையாளமாகும். இதுவே தெய்வீக தன்மைக்குரிய குணமும் ஆகும். 

அதனால் தெய்வத்திற்கு சமமான 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து கன்னியா பூஜை நடத்தி, அவர்களின் மனம் மகிழும் படி பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். இதனால் அம்பிகையும் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பாள்.

அம்பிகையின் வடிவம் - நரசிம்ம தாரினி
கோலம் - பத்ம வகை கோலம்
மலர் - ரோஜா
இலை - மருதாணி
நைவேத்தியம் - பால் சாதம்
சுண்டல் - மொச்சைப் பயறு சுண்டல்
பழம் - திராட்சை
நிறம் - பச்சை அல்லது அரக்கு
ராகம் - புன்னாகவராளி

நவதுர்க்கை வழிபாடு

துர்கையின் வடிவம் - மஹா கெளரி
வாகனம் - காளை வாகனம்
நிறம் - ஊதா
நைவேத்தியம் - தேங்காய் சாதம்
மஹாகெளரி மந்திரம் - ஓம் தேவி மகாகெளரியே நமஹ

துர்கையின் இந்த வடிவத்தை வழிபடுவதால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இவள் கருணையே வடிவமான தாயாக வழங்குவதால், தன்னை வழிபடும் பக்தர்களின் துன்பங்கள் அனைத்தையும் போக்கி, அளவில்லாத மகிழ்ச்சியை தரக் கூடியவள்.

Post a Comment

Previous Post Next Post