மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :

மார்கழி திருவாதிரை என்பது நடராஜர் வழிபாட்டிற்குரிய நாளாகும். இந்த நாளில் சிவனை மனதார நினைத்து வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவ பெருமானுக்குரிய மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று மார்கழி மாதத்தில் வரக் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் ஆடல் அரசனான நடராஜ பெருமானின் தரிசனத்தையும், அருளையும் பெற வேண்டிய அற்புதமான நாள் என்பதால் இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர். 

சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெறும். அவற்றில் மஹா அபிஷேகம் என சொல்லக் கூடியது மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகம் தான். சேந்தனார் என்ற பக்தனுக்கு சிவ பெருமான் அருள் புரிந்ததன் அடையாளமாக கொண்டாடப்படும் திருநாளே இந்த ஆருத்ரா தரிசன திருநாள்.

ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழி திருவாதிரை நாளில் நாமும் ஈசனின் அருளை பெற வேண்டும் என்றபதற்காக இந்த நாளில் விரதம் இருக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அதே போல் பெண்கள், தங்களின் கணவர் நலமுடன் இருக்க வேண்டும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த நாளில் விரதம் இருப்பதும் வழக்கமாக உள்ளது. 

இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொண்டு, மாங்கல்ய நோம்பு நோற்பதும் வழக்கமாக உள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. ஜனவரி 12ம் தேதி காலை 11.27 மணிக்கு துவங்கி, ஜனவரி 13ம் தேதி காலை 10.38 மணி வரை திருவாதிரை நட்சத்திரம் உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், காலை நேரத்தில் என்று திருவாதிரை நட்சத்திரம் உள்ளதோ அந்த நாளில் தான் அபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை காலையில் தான் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். 

திருவாதிரை விரதத்தை இரண்டு விதமாக கடைபிடிப்பது வழக்கம். ஒன்று, திருவாதிரை நட்சத்திரம் துவங்கியதில் இருந்து விரதம் இருந்து, நடராஜருக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்வது. மற்றொன்று, நடராஜருக்கு அபிஷேகம் ஆன பிறகு அன்று முழுவதும் விரதம் இருந்து, மாலையில் பெளர்ணமி திதியில் விரதத்தை நிறைவு செய்வது. இதில் யாருக்கு எந்த முறை வழக்கமோ அல்லது வசதியோ அந்த முறைப்படி விரதம் இருக்கலாம்.

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் அதிகாலை சூரிய உதயதிற்கு முன்பே எழுந்து, வீட்டில் எண்ணெய், சீயக்காய் ஆகியவற்றை பெரியவர்கள் கையகளால் வைத்து விடச் சொல்லி குளிக்க வேண்டும். மஞ்சள் தேய்த்து குளிக்கும் வழக்கம் இல்லாதவர்களும் அன்று கண்டிப்பாக மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.

குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி வைத்து, காலையிலேயே சிவ பெருமானுக்கு களி படைத்து, குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், சிவ பெருமானையும் வழிபட்டு, குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனுக்காகவும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கவும் வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு முடிந்தவர்கள் உபவாசமாக இருந்தும், முடியாதவர்கள் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டம் விரதம் இருக்கலாம்.

திருவாதிரை அன்று காலையிலேயே தாலி சரடு மாற்றிக் கொள்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம். சமீபத்தில் தான் தாலி சரடு மாற்றினோம் என்பவர்கள் மஞ்சள் நூல் மட்டும் வைத்து வழிபட்டு, அன்று மட்டும் அதை அணிந்து கொள்ளலாம். அதே போல் திருவாதிரை விரதம் அன்று காலையிலேயே அதிரசத்திற்கு மாவு சேர்த்து வைத்து விட வேண்டும். 

மாலையில் 21 அதிரசம், 21 வடை, 21 சுய்யம் ஆகியவற்றுடன் 21 வகையான காய்களிகளால் செய்யப்பட்ட உணவுகள் சமைத்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு, கணவர் சாப்பிட்ட பிறகு, பெண்கள் சாப்பிட்டு பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 21 என்ற எண்ணிக்கையில் செய்ய முடியாதவர்கள் தங்களால் முடிந்த எண்ணிக்கையில் செய்து படைத்து வழிபடலாம்.

மார்கழி திருவாதிரை அன்று யார் ஒருவர் மனம் உருகி சிவ பெருமானை வழிபட்டு, விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவ பெருமானின் அருளுடன், அம்பிகையின் பரிபூரண அருளும் கிடைக்கும். அனைத்து விதமான நலன்களும் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய குடும்பத்தினர்களுக்கும் கிடைத்து, திருமணம் போன்ற தடைகள் நீங்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். பிரிந்து இருக்கும் கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கை அமையும்.

Post a Comment

Previous Post Next Post